அண்ணாதுரை பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ் அறிக்கை
அண்ணாதுரை பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ் அறிக்கை
UPDATED : செப் 15, 2025 09:41 AM
ADDED : செப் 15, 2025 08:21 AM

சென்னை: திமுக எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன் அண்ணாதுரை; தலைமகன் நிமிர்த்திய தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்ணாதுரையின் 117வது பிறந்த நாளை ஒட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ''தமிழன்னை தந்திட்ட தலைமகன்; திமுக எனும் நம் உயிரைத் தாயென அளித்திட்ட திருமகன் அண்ணாதுரை; தலைமகன் நிமிர்த்திய தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்'' என குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாதுரையின் பிறந்த நாளை ஒட்டி இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம், தமிழ், திராவிடம் என்றால் அண்ணாதுரை. அண்ணாதுரை என்றால் தமிழகம், தமிழ், திராவிடம். இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சி ஆட்சி அமைக்க முடியுமா? நாட்டுக்குள் ஒரு தமிழகமா? என்று சந்தேக கேள்விகள் கேட்ட காலத்தில் தன் செயலால், சாதனையால் பதில் சொன்னவர் அண்ணாதுரை.
அண்ணாதுரையை பெயரில் மட்டும் அல்ல, கொள்கையில், செயலில், அரசியல் அறத்தில் 53 ஆண்டுகளாக பெருமையோடு ஏந்தி நிற்கிறது அதிமுக.
குடும்பப் பின்புலமற்ற நம்மைப் போன்ற சாமானியர்களை அரியணை ஏற்றும் திராவிட அரசியலின் ஈடு இணையற்ற அண்ணாதுரையின் பிறந்தநாளான இன்று, குடும்ப ஆட்சியின் பிடியில் சிக்கியுள்ள தமிழகத்தை மீட்டு, சாமானிய மக்களுக்கான அண்ணாயிசம் போற்றும் ஆட்சியை அதிமுக தலைமையில் நிறுவிட உறுதியேற்போம். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம். இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.