இந்தாண்டு இறுதிக்குள் புதிதாக 1 லட்சம் பேருக்கு புற்றுநோய் : தேசிய சுகாதார திட்ட அதிகாரி தகவல்
இந்தாண்டு இறுதிக்குள் புதிதாக 1 லட்சம் பேருக்கு புற்றுநோய் : தேசிய சுகாதார திட்ட அதிகாரி தகவல்
ADDED : செப் 03, 2025 03:25 AM

கோவை : தமிழகத்தில் நடப்பாண்டு இறுதிக்குள், புதிதாக ஒரு லட்சம் பேருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பது, தமிழ்நாடு புற்றுநோய் பதிவு திட்ட புள்ளிவிபரங்கள் வாயிலாக தெரியவந்துள்ளது.
2000 பேருக்கு நோய் அறிகுறி
தமிழ்நாடு புற்றுநோய் பதிவு திட்டத்தின் கீழ், மாநில அளவில் புற்றுநோய் பாதிப்புகள் கண்காணிக்கப்படுகின்றன. 2021 வரை உறுதி செய்யப்பட்ட புற்றுநோய் பாதிப்பு விவரங்களும், 2022 முதல் 2025 வரை எதிர்பார்க்கப்படும் புதிய புற்றுநோய் பாதிப்புகள் குறித்த கணிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.இதன்படி, கோவையில் கடந்த நான்கு மாதங்களில், 3.2 லட்சம் பேருக்கு மூன்று பிரிவுகளின் கீழ் மேற்கொண்ட பரிசோதனைகளில், 2000 பேருக்கு நோய் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதில், 49 பேருக்கு உறுதிசெய்யப்பட்டு, சிகிச்சை துவக்கப்பட்டுள்ளது.
தேசிய சுகாதார திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:
1,00,097 பேர்
2012ல் 53,022 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். 2021ல் 76,968 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மாநில அளவில், 2022 முதல் புதிதாக ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரம், தமிழ்நாடு புற்றுநோய் பதிவு திட்டத்தின் கீழ் தொகுக்கப்படுகிறது. தவிர, 2025 இறுதிக்குள் புதிய புற்றுநோய் பாதிப்பு பட்டியலில், 1,00,097 பேர் வரலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
உறுதி செய்யப்பட்ட புள்ளிவிபரங்களின் படி, வாய், பெருங்குடல், வயிறு, நுரையீரல், நாக்கு ஆகிய ஐந்து புற்றுநோய்கள், பெண்களுக்கு மார்பகம், கர்ப்பப்பை வாய், கருமுட்டை, கார்பஸ்யூட்டெரி புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் அதிகம் காணப்படுகின்றன. பொதுமக்கள் ஆரோக்கியமான வாழ்வியல் மாற்றங்களை, பின்பற்ற வேண்டியது அவசியம்.இவ்வாறு, அவர் கூறினார்.