விழுப்புரம் சுற்றுப்பகுதியில் மும்முனை மின்சாரம்... வழங்கப்படுமா?10 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத கோரிக்கை
விழுப்புரம் சுற்றுப்பகுதியில் மும்முனை மின்சாரம்... வழங்கப்படுமா?10 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத கோரிக்கை
UPDATED : ஜூன் 22, 2026 03:41 PM
ADDED : ஜூன் 22, 2026 03:10 PM

விழுப்புரம்: விழுப்புரம் சுற்றுப்பகுதியில் 15 கி.மீ., தொலைவிற்கு மும்முனை மின்சார வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என்ற 10 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில், போதிய தொழிற்சாலைகள், வேலை வாய்ப்புகளின்றி இளைஞர்கள் தவித்து வருகின்றனர். சென்னை, பெங்களூரு, புதுச்சேரி பகுதி தொழிற்சாலைகளுக்கு வேலை தேடிச்செல்லும் நிலை நீண்டகாலமாக தொடர்கிறது.
மாவட்டத்தில், தொழிற்பேட்டைகள் அமைக்க வேண்டும், புதிய தொழில்கள் தொடங்குவதற்கு உரிய வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற தொழில் முனைவோர்களின் கோரிக்கையும் தொடர்ந்து வருகிறது.
குறிப்பாக, மாவட்ட தலைநகரான விழுப்புரத்தில் பெரிய தொழிற்சாலைகள், தொழிற்பேட்டைகள் இல்லை. தற்போதுள்ள சிறிய அளவிலான தனியார் தொழிற்சாலைகளில் தொழில்களை மேற்கொள்வதற்கும், மும்முனை மின்சார வசதி உள்ளிட்டவை ஏற்படுத்திக் கொடுக்காததால், சிறு, குறு தொழில்களும் மேம்பட வசதியின்றி முடங்கி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
விழுப்புரத்தில், கிழக்கு பாண்டி ரோடு கோலியனுார், செஞ்சி சாலை, மாம்பழப்பட்டு சாலை, திருவண்ணாமலை சாலை, திருச்சி சாலைகளில் இருந்த லேத்துகள், வெல்டிங் பட்டறைகள், இரும்பு கட்டுமானப் பொருள் உற்பத்திக் கூடங்கள், கிரில் ஒர்க்குகள், பஸ் பாடி பில்டர்கள், சில்வர் பட்டறை போன்றவை நகர வளர்ச்சி காரணமாக புறநகர் பகுதிகளுக்கு சென்றுள்ளன.
ஆனால், விழுப்புரத்தில் இந்த சிறு தொழில்களுக்கான மும்முனை மின்சார வசதி இண்டஸ்டிரீயல் சப்ளை நகர்ப்புறத்தில் மட்டுமே உள்ளது. கோலியனுார், வளவனுார், விக்கிரவாண்டி, காணை, ஜானகிபுரம் போன்ற இடங்களில் 15 கி.மீ., சுற்றளவில், மும்முனை மின்சார சப்ளை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை இருந்து வருகிறது.
மும்முனை மின்சாரம், மின் வெட்டு பிரச்னை போன்றவை சரி செய்யப்படாததால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்படுவதாக புகார்கள் தொடகிறது.
இது குறித்து, விழுப்புரம் மாவட்ட சிறு,குறு தொழில் சங்கத்தினர் கூறுகையில், 'விழுப்புரத்தில் 15 கி.மீ., சுற்றளவில் முழுநேர மும்முனை மின்சார வசதியளிக்க, மின்துறைக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். அதன்படி, விழுப்புரம் தலைமை மின்வாரிய அதிகாரிகள் குழுவினர், கடந்த 2023ம் ஆண்டு நவம்பரில், அதற்கான திட்ட அறிக்கையை, சென்னை தலைமை மின் வாரிய அலுவலகத்திற்கு அனுப்பினர். அங்கிருந்து பதில் வந்ததும், நடவடிக்கை எடுப்பதாக பதில் அளித்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த 2025ம் ஆண்டு டிசம்பரில், விழுப்புரம் மின்வாரிய உயரதிகாரிகள், விழுப்புரம் சுற்று வட்டாரத்தில், மும்முனை மின்சாரம் வழங்க போதிய தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் இல்லை என பதில் அளித்திருந்தனர்.
தற்போது, பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ள காலத்தில், மும்முனை மின்சாரம் வழங்க தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் இல்லை என, மின் வாரியத்தினர் கூறுவது ஏற்புடையதல்ல.
இதனால், விழுப்புரத்தில் சிறு, குறு தொழில்கள் மேம்படுவதற்கு 15 கி.மீ., சுற்றளவில் முழுநேர மும்முனை மின்சாரம் வழங்க கலெக்டரும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
