'சிங்கிள் பேரண்ட்' பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு... ஏற்படுத்தப்படுமா?மாவட்டத்தில் அதிகளவிலான 'போக்சோ' வழக்குகளில் பாதிப்பு
'சிங்கிள் பேரண்ட்' பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு... ஏற்படுத்தப்படுமா?மாவட்டத்தில் அதிகளவிலான 'போக்சோ' வழக்குகளில் பாதிப்பு
UPDATED : ஜூன் 21, 2026 03:51 PM
ADDED : ஜூன் 21, 2026 03:50 PM

-நமது நிருபர்-
விழுப்புரம் மாவட்டத்தில் அதிகளவிலான போக்சோ வழக்குகளில் 'சிங்கிள் பேரண்ட்' பெண் குழந்தைகள் பாதிக்கப்படுவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல் மற்றும் வன்புணர்ச்சியால் போக்சோ வழக்குகள் அதிகரித்து வருகிறது. அதன்படி, மாவட்டத்தில், கடந்த 2025ம் ஆண்டு ஜூன் மாதம் வரை 29 போக்சோ வழக்குகளும், இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 28 போக்சோ வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த போக்சோ குற்றங்களில் 'சிங்கிள் பேரண்ட்' உள்ள பெண் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்குகள் தொடர்பான விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுமிகளில் பெரும்பாலானோர் ஒற்றைப் பெற்றோர் (சிங்கிள் பேரண்ட்) குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இல்லையென்றால், தாய், தந்தை ஆகியோர் வேலைக்காக வெளியூர்களில் வசிப்பதால் தாத்தா, பாட்டி பராமரிப்பில் வளர்பவர்கள் மற்றும் பெற்றோர் இல்லாமல் உறவினர்களின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் பெண் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
மாவட்டத்தில் போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளில் கடந்த ஆண்டு 11 பேரும், இந்தாண்டு 8 பேரும் இதுபோன்ற நிலையில் உள்ளவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்குகளில் பெரும்பாலான சம்பவங்களில் குழந்தைகளுக்கு நெருங்கிய உறவினர்கள் அல்லது அறிமுகமான நபர்களாலேயே பாலியல் தொல்லைகள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர். இதன் மூலம், குழந்தைகளுக்கு வெளி நபர்களால் மட்டுமல்லாமல், நெருக்கமான உறவினர்களிடமிருந்தும் பாலியல் தொல்லை ஏற்படக்கூடும் என தெரியவந்துள்ளது.
இதுபோன்ற குழந்தைகளிடம், அவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் தொடர்ந்து உரையாடி, 'குட் டச்; பேட் ட்ச்' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் எந்தவிதமான அசவுகரியமான அல்லது தவறான செயல்களால் பாதிக்கப்பட்டால் அச்சமின்றி பெற்றோர், ஆசிரியர்கள் அல்லது நம்பகமான நபர்களிடம் தெரிவிக்க ஊக்குவிக்க வேண்டும்.
மேலும், குழந்தைகள் நல வாரியம், குழந்தைகள் பாதுகாப்பு அலகுகள், பள்ளிக் கல்வித்துறை மற்றும் சமூக நலத்துறை இணைந்து, பெற்றோர் இல்லாத குழந்தைகளை பள்ளிகளில் அடையாளம் காண வேண்டும்.
அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் பாலியல் சீண்டல் தொடர்பான ஆலோசனைகளை வழங்க வேண்டும். அந்த குழந்தைகளைத் தொடர்ந்து கண்காணித்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், பள்ளிகள், செங்கல் சூளைகள், தொழிற்சாலைகள் மற்றும் குழந்தைகள் அதிகம் கூடும் இடங்களில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அதிகளவில் நடத்த வேண்டும். பள்ளிகளில் 'குட் டச்; பேட் டச்' மற்றும் குழந்தைகள் உதவி எண் 1098 குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதுமட்டுமின்றி, பள்ளிகளில் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த வேண்டும். அப்போது, பெண் குழந்தைகளை பாலியல் தொல்லையில் இருந்து மீட்க முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பாக அறிவுரை வழங்க வேண்டும்.
பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி, உரிய விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பை ஏற்படுத்தினால் மாவட்டத்தில் போக்சோ குற்றங்களை கணிசமாக குறைக்கலாம்.
எனவே, பெண் குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை ஒன்றிணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
