ஏரிகளில் கழிவுநீர், இறைச்சிக் கழிவுகள் கலப்பு! பாசனத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை
ஏரிகளில் கழிவுநீர், இறைச்சிக் கழிவுகள் கலப்பு! பாசனத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை
UPDATED : ஜூன் 15, 2026 11:33 AM
ADDED : ஜூன் 14, 2026 04:10 PM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட பொதுப்பணி துறை (நீர்வளம்) கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் கழிவுநீர் கலப்பதால் விவசாய பாசனத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயத்திற்கான நீர் ஏரிகளில் நிரம்பி வரத்து வாய்க்கால்களில் பாய்ந்து, அதன் மூலம் பாசனம் பெறப்படுகிறது.இந்த ஏரிகளை பராமரிக்கும் பணிகளில் பொதுப்பணி துறை (நீர்வளம்) துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளனர்.
பொதுப்பணி துறை கட்டுப்பாட்டின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் 505 ஏரிகளும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 115 ஏரிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏரிகள் உட்பட மொத்தம் 624 ஏரிகள் உள்ளது. இந்த ஏரிகளில் வளர்ந்துள்ள கருவேல மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைக் காலங்களில் தேக்குவது வழக்கம்.
ஏரிகள் நிம்பி வரத்து வாய்க்கால்கள் மூலம் பாசனத்திற்கு செல்வதில் இடையூறு ஏற்படும் இடங்களில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து அதை சரி செய்து பாதிப்பின்றி பாசன வசதிக்கு தண்ணீர் செல்வதை உறுதி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பெரும்பாலான ஏரிகளில் தண்ணீர் வறண்டு வருகிறது. விவசாயிகள் நிலத்தடி நீரைக் கொண்டு பம்ப்செட் மோட்டார் மூலம் சாகுபடிக்கு தண்ணீர் பாய்ச்சுகின்றனர். பொதுப்பணித் துறை (நீர்வளம்) கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் 214 ஏரிகளிலும், கள்ளக்குறிச்சியில் 50 ஏரிகளில் மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது.
இதில், 120க்கும் மேற்பட்ட ஏரிகளில் பலர் கழிவுநீரை திறந்து விடுவதால் ஏரி நீரில் கலந்துள்ளது. இதனால், பாசனத்திற்கு அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
மறுபுறத்தில் ஏரி நீரை நம்பி அதில், மீன் குத்தகை எடுத்துள்ளோர், கழிவுநீர் கலப்பதால் மீன்கள் இறக்கும் நிலை இருப்பதால் பல லட்சம் ரூபாய் செலவு செய்து விட்டு புலம்புகின்றனர்.
மேலும், சில ஏரிகளில் பொதுமக்கள் பலரும் குப்பைகளையும், இறைச்சிக் கழிவுகளையும் கொட்டி அசுத்தம் செய்துள்ளனர். இது மட்டுமின்றி, பாதாள சாக்கடை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் வெளியேறும் கழிவுகளை பலரும் ஏரிகளில் விடுவதால், தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது.
இதுகுறித்து பொதுப்பணி துறை (நீர்வளம்) அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், 'நாங்கள் ஏரிகளை எவ்வளவு தான் ஆய்வு செய்து விட்டு, வந்தாலும் மக்களும் விழிப்புணர்வு இல்லாமல் ஏரி நீரில் அசுத்தம் செய்கின்றனர். நகராட்சி பகுதிகளில் உள்ள அதிகாரிகள் தங்களின் ஊழியர்கள் மூலம் சரியாக பாதாள சாக்கடை பழுதை சீரமைக்காததால் தற்போது அது ஏரி நீரை மாசுபடுத்துகின்ற வகையில் சென்றுள்ளது. அதிகாரிகள், மக்கள் இணைந்து தங்களின் கடைமையை உணர்ந்து பணி செய்தால்தான் ஏரி நீர் மாசுபடும் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்' என்றனர்.
