ஆட்சி மாறினாலும்; காட்சி மாறவில்லை என விரக்தி! குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
ஆட்சி மாறினாலும்; காட்சி மாறவில்லை என விரக்தி! குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
UPDATED : ஜூன் 12, 2026 01:28 PM
ADDED : ஜூன் 11, 2026 03:42 PM

திண்டிவனம்: திண்டிவனத்தில் நடந்த கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில், 'ஆட்சி மாறினாலும்; காட்சி மாறவில்லை' என விவசாயிகள் விரக்தியுடன் பேசினர்.
திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை 11:00 மணியளவில் சப் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனுார் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்ற கோட்ட அளவிலான குறைகேட்புக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் விவசாயிகள் புகார் மற்றும் குறைகள் குறித்து பேசியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் 500க்கு மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிந்த சவுக்கு மின் கசவு காரணமாக எரிந்து சேதடைந்தது. சேதம் தொடர்பாக எந்த துறையிடம் புகார் கொடுப்பது என தெரியவில்லை. புகார் கொடுத்தால் வழக்கும் பதிவு செய்வதிலை.
சேதமானது குறித்து வேளாண், தோட்டக்கலை, வனத்துறை என பல துறைகளிடம் மனு கொடுத்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
சவுக்கு சேதத்திற்கு விவசாயத்துறை இழப்பீடு வழங்குமா அல்லது தோட்டக்கலை, வனத்துறை இழப்பீடு வழங்குமா என்று இதுவரை அரசு சார்பில் எந்த அறிவிப்பும் வழங்கவில்லை.
மேலும், அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளுக்கான நிலுவை தொகை 18 கோடி ரூபாய் உள்ளது. பல முறை கேட்டும் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை.
விவசாயிகளின் ஆடுகள் வெறி நாய் கடித்து பலியாகி வருகின்றது. இதுவரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கவில்லை. பட்டா மாற்றம் முறையாக நடக்கவில்லை.
வரும்காலங்களில் ஜமாபந்தி நிகழ்ச்சிகள் வருவாய் கிராம அளவில் நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
திண்டிவனம் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் நிற்பதில்லை. பெரும்பாலான பஸ்கள் மேம்பாலத்தின் கீழ் நிற்பதால் பயணிகள் அவதியடைகின்றனர். இந்த பிரச்னையில் சப்கலெக்டர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நேரடி கொள்முதல் நிலையத்தில் கடந்த ஆட்சியில் ஒரு மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சம் வாங்கியது போல், தற்போதும் மூட்டைக்கு 50 ரூபாய் வாங்குகின்றனர். ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை. தொடர் மின்வெட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
கூட்டத்தில் சப் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜன், தாசில்தார் ஏழுமலை உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
