அமைச்சர் இல்லாத மாவட்டமாக விழுப்புரம் மீண்டும் தொடர்கிறது! த.வெ.க., வினர் வெற்றி பெறாததால் பறிபோன வாய்ப்பு
அமைச்சர் இல்லாத மாவட்டமாக விழுப்புரம் மீண்டும் தொடர்கிறது! த.வெ.க., வினர் வெற்றி பெறாததால் பறிபோன வாய்ப்பு
UPDATED : மே 11, 2026 07:40 AM
ADDED : மே 10, 2026 11:12 PM

- நமது நிருபர் -
விழுப்புரம் மாவட்டத்தில் ஆளுங்கட்சியான த.வெ.க.,வினர் யாரும் வெற்றி பெறாததால், மீண்டும் அமைச்சர் இல்லாத மாவட்ட பட்டியலில் இடம்பெறவுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்., 23ம் தேதி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில், அ.தி.மு.க., - தி.மு.க., - த.வெ.க., - நா.த.க., என நான்குமுனை போட்டியில் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் த.வெ.க., 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனாலும், பெரும்பான்மை இல்லாததால், மற்ற கட்சிகளின் ஆதரவை கேட்டதால் புதிய அரசு பொறுப்பேற்பதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, தி.மு.க., கூட்டணியில் இருந்த காங்., - வி.சி., கட்சி, இரண்டு கம்யூ., கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் த.வெ.க., ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தனர். இதனால், நேற்று த.வெ.க., தலைவர் ஜோசப் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றார்.
புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், அமைச்சர் இல்லாத மாவட்ட பட்டியலில் மீண்டும் விழுப்புரம் இடம்பெற்றுள்ளது. ஏனெனில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், திருக்கோவிலுார், விக்கிரவாண்டி, மயிலம், செஞ்சி, திண்டிவனம் (தனி), வானுார் (தனி) ஆகிய தொகுதிகளில் மூன்று இடங்களில் தி.மு.க., கூட்டணி மற்றும் நான்கு இடங்களில் அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். மாவட்டத்தில் த.வெ.க., வேட்பாளர்கள் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. இதனால், அமைச்சரவை பட்டியலில் விழுப்புரம் மாவட்டம் மீண்டும் இடம்பெறாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., ஆட்சிகளில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் இடம்பெற்று வந்தனர். கடந்த தி.மு.க., ஆட்சியில் பொன்முடியின், அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆண்டு ஏப்., மாதம் முதல் அமைச்சர் இல்லாத மாவட்டமாக விழுப்புரம் இருந்தது. தற்போது த.வெ.க., பெரும்பான்மை இல்லாததால், ஆட்சி அமைக்க மாற்று கட்சியின் ஆதரவை திரட்டினர். அப்போது, த.வெ.க.,விற்கு, அ.தி.மு.க., - பா.ம.க., மற்றும் வி.சி., கட்சியினர் ஆதரவு கொடுத்தால், ஆட்சியில் பங்கு மற்றும் அதிகாரத்தில் பங்கு கேட்கப்படும் என கூறப்பட்டது. அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் தற்போதுள்ள எம்.எல்.ஏ.,க்கள் ஒருவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
ஆனால், அ.தி.மு.க., - பா.ம.க., ஆகிய கட்சிகள் த.வெ.க.,விற்கு ஆதரவு அளிக்கவில்லை. இதையடுத்து, வி.சி., கட்சி ஆதரவு அளிக்கும் என்ற தகவல் வெளியானபோது அக்கட்சியின் எம்.எல்.ஏ.,விற்கு அமைச்சர் பதவி கேட்கப்படும் எனவும் பேசப்பட்டது. ஆனால், வி.சி., கட்சி, த.வெ.க.,விடம் ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கேட்காமல் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்ததாது. இதனால், மீண்டும் அமைச்சர் இல்லாத மாவட்டமானது விழுப்புரம்.
ஆளுங்கட்சியின் அமைச்சராக இருந்தால், அந்த மாவட்டத்திற்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகளுக்கான நிதிகளை அரசிடம் கோரிக்கை வைத்து பெறுவதற்கு சுலபமாக இருக்கும். ஆனால், விழுப்புரம் மாவட்டத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் ஆட்சியிலும், அதிகாரத்திலும் இடம்பெறவில்லை. கடந்த ஆட்சிகளில் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தி.மு.க., - அ.தி.மு.க.,வில் அமைச்சர்களாக இருந்தவர்கள் போட்டிக்கொண்டு நிதி ஒதுக்கீடு பெற்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினர். ஆனால், புதிய ஆட்சியில் ஆளுங்கட்சி அமைச்சர் இல்லாததால் மாவட்டத்தின் வளர்ச்சி எப்படி இருக்குமோ என சமூக ஆர்வலர்கள் புலம்பி வருகின்றனர்.
