/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஊராட்சி செயலரை மாற்ற கலெக்டருக்கு மனு
/
ஊராட்சி செயலரை மாற்ற கலெக்டருக்கு மனு
ADDED : செப் 21, 2025 06:34 AM
பல்லடம்: ஊராட்சி செயலரை மாற்ற, பணிக்கம்பட்டி மக்கள், கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளனர்.
பல்லடம் ஒன்றியம், பணிக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:
ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் முடிந்த நிலையில், தனி அலுவலர்களின் கட்டுப்பாட்டில் ஊராட்சி நிர்வாகம் உள்ளது. ஆனால், பணிக்கம்பட்டி ஊராட்சியில், முன்னாள் ஊராட்சி தலைவரின் வழிகாட்டுதலின்படி தான், ஊராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
மேலும், பொதுமக்களுக்கான அனைத்து திட்டங்களிலும் முன்னாள் ஊராட்சி தலைவர் தலையிடுவதும், அனைத்து ஒப்பந்தப் பகுதிகளையும் தாமே எடுத்துக்கொள்வதுமான செயல்களுக்கு ஊராட்சி செயலரும் துணை போகிறார். இதனால், மக் கள் திட்ட பணிகளில் பல முறைகேடுகளும் நடந்து வருகிறது.
இதற்கு உதாரணமாக, பொதுமக்களிடமிருந்து, 100 ரூபாய் குடிநீர் கட்டணத்துக்கு பதிலாக, மாதந்தோறும், 120 ரூபாய் அட்டை போட்டு வசூல் செய்யப்படுகிறது. இவ்வாறு வசூல் செய்யப்படும் தொகையை, முறையாக ஊராட்சி வங்கிக் கணக்கில் செலுத்தாமல், கையிருப்பு வைத்துக் கொள்கின்றனர்.
இதை தங்கள் சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்துகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இவ்வாறு, ஊராட்சியில் நடக்கும் பல்வேறு முறைகேடுகளுக்கு ஆதரவாக ஊராட்சி நிர்வாகமே செயல்பட்டு வருவது கவலையாக உள்ளது.
எனவே பணிக்கம்பட்டியில் பல ஆண்டாக வேலை பார்த்து வரும் ஊராட்சி செயலரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.