/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெடுஞ்சாலையா... கொடுஞ்சாலையா? மாநகராட்சி பகுதியில் 300 இடங்களில் குழி; அக்., மாதத்துக்குள் சீரமைக்க 'அட்வைஸ்'
/
நெடுஞ்சாலையா... கொடுஞ்சாலையா? மாநகராட்சி பகுதியில் 300 இடங்களில் குழி; அக்., மாதத்துக்குள் சீரமைக்க 'அட்வைஸ்'
நெடுஞ்சாலையா... கொடுஞ்சாலையா? மாநகராட்சி பகுதியில் 300 இடங்களில் குழி; அக்., மாதத்துக்குள் சீரமைக்க 'அட்வைஸ்'
நெடுஞ்சாலையா... கொடுஞ்சாலையா? மாநகராட்சி பகுதியில் 300 இடங்களில் குழி; அக்., மாதத்துக்குள் சீரமைக்க 'அட்வைஸ்'
ADDED : செப் 12, 2025 11:08 PM

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி பகுதியிலுள்ள நெடுஞ்சாலை ரோடுகளில், 25 கி.மீ., அளவுக்கு குண்டும் குழியுமாக இருப்பதாக, அதிகாரிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. திருப்பூர் மாவட்ட நெடுஞ்சாலைக்கு உட்பட்ட சாலைகளில் பராமரிப்பு, புதுப்பிப்பு பணிகள் அவ்வப்போது, நெடுஞ்சாலைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி எல்லையில் உள்ள நெடுஞ்சாலையின் பல இடங்கள் குண்டும், குழியுமாக பல்லாங்குழி ரோடுகளாக உள்ளன.
குடிநீர் குழாய் பதிக்க, பதிக்கப்பட்ட குடிநீர் குழாய் கசிவை சரி செய்ய மற்றும் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணிக்கென, திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தினர் பல இடங்களில் ரோட்டோரம் தோண்டியுள்ளனர்; தோண்டப்பட்ட குழி, மூடப்படாமல் உள்ளதால், பல்லாங்குழி ரோடுகளாக மாறியுள்ளன. இதனால், வாகன போக்குவரத்துக்கும், மக்கள் நடமாடவும் பெரும் சிரமம் ஏற்படுகிறது.
மாநகராட்சி நிர்வாகம் ரூ.6 கோடி நிலுவை
மாநில நெடுஞ்சாலைத்துறையினர் கூறியதாவது: திருப்பூர் மாநகராட்சியில், சேதமடைந்த சாலைகளை செப்பனிட வேண்டும் என்ற கோரிக்கையை இ-மெயில் வாயிலாகவும், நெடுஞ்சாலைத்துறையின் 'நம்ம செயலி' வாயிலாகவும், பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். அதனால், நடத்தப்பட்ட ஆய்வில், மாநகராட்சி எல்லையில் உள்ள, 200 கி.மீ., துார நெடுஞ்சாலையில், 25 கி.மீ., துார ரோடு சேதமடைந்திருக்கிறது; 300க்கும் மேற்பட்ட இடங்களில் தோண்டப்பட்ட சாலைகள் மூடப்படாததால் குழியாக இருப்பது தெரிய வந்திருக்கிறது.
தோண்டப்பட்ட ரோடுகளை மீண்டும் மூட, மாநகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறைக்கு பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும்; ஆனால், தொகை வழங்கவில்லை. 6 கோடி ரூபாய் வரை மாநகராட்சி நிர்வாகம் நிலுவை வைத்திருக்கிறது. இதனால், நெடுஞ்சாலைத்துறையினரால் பராமரிப்புப்பணி மேற்கொள்ளப்படவில்லை. மாநகராட்சி நிர்வாகத்தினர் தொகையை செலுத்தியவுடன் நெடுஞ்சாலைத்துறை சார்பில், பராமரிப்புப் பணி துவங்கி, விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விளக்கத்தை, நெடுஞ்சாலைத்துறையினர், அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிகாரி குழு ஆய்வு
இந்நிலையில், சேதமடைந்த சாலைகளை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட இயக்குனர் பாஸ்கர பாண்டியன் மற்றும் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன் உள்ளிட்ட குழுவினர், அனுப்பர்பாளையம், காசிபாளையம், நல்லுார், ராக்கியாபாளையம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
'குழாய் பதிக்கும் பணியை, இம்மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும். சாலை சீரமைப்புப்பணிகளை, அக்., மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும்' என, திட்ட இயக்குனர் அறிவுறுத்தினார்.
தோண்டப்பட்ட ரோடுகளை மீண்டும் மூட, மாநகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறைக்கு பராமரிப்புத் தொகை வழங்க வேண்டும். ஆனால், தொகை வழங்கவில்லை. 6 கோடி ரூபாய் வரை மாநகராட்சி நிர்வாகம் நிலுவை வைத்துள்ளது.