UPDATED : ஜூன் 18, 2026 09:24 PM
ADDED : ஜூன் 18, 2026 09:11 PM

மதுரை: 'மதுரை நகரில் ரோட்டில் குப்பை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுங்கள்' என மாநகராட்சி அலுவலர்களுக்கு கமிஷனர் கவுரவ் குமார் உத்தரவிட்டார்.
மாநகராட்சி மண்டலம் 4 வார்டு அனுப்பானடி ராஜூவ்காந்தி மெயின் தெருக்கள் உட்பட பல்வேறு பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை குறித்து கமிஷனர் ஆய்வு செய்தார். வடக்குத் தெருவில் உள்ள வீடுகளில் முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம் குடிநீர் இணைப்புகள், விநியோகம் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார்.
அனுப்பானடி பன்னீர் செல்வம் தெருவில் ரோடுகளில் குப்பை கொட்டப்பட்டிருந்தது பார்த்து, அப்பகுதி குடியிருப்பவர்களிடம் அச்செயலை தவிர்க்குமாறு அறிவுரை வழங்கினார். இதன்பின் மாநகராட்சி பணியாளர்களிடம் ரோட்டில் குப்பை கொட்டும் செயல்களை தவிர்க்க உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மீறி கொட்டுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
ஆய்வில் உதவி கமிஷனர் மணிமாறன், உதவி நகர்நல அலுவலர் அபிஷேக், சுகாதார அலுவலர் வீரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
