ADDED : மே 17, 2026 03:43 AM

சென்னை: மின் நுகர்வோரின் வங்கி கணக்கில் இருந்து, தானியங்கி முறையில் மின் கட்டணத்தை செலுத்தும் வசதியை, தமிழக மின் வாரியம் தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் வீடுகளுக்கு, இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது.
கணக்கெடுத்த நாளில் இருந்து, 20 நாட்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையெனில் மின் வினியோகம் துண்டிக்கப்படும். பின், அபராதத்துடன் கட்டணம் செலுத்தியதும், மீண்டும் மின்சாரம் வழங்கப்படும்.
சிலர், மறதி உள்ளிட்ட காரணங்களால் மின் கட்டணத்தை செலுத்த மறந்து விடுகின்றனர்.
தற்போது தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் வசதியை மின் வாரியம் தொடங்கியுள்ளது.
அதன்படி, 'www.tnpdcl.org' இணையதளத்திற்கு சென்று, 'பேமென்ட்' பகுதியில் உள்ள, 'இ.பி. ஆட்டோ பே'வை தேர்வு செய்ய வேண்டும்.
அதில் மின் இணைப்பு எண்ணை பதிவிட்டு, விபரங்களை சரிபார்த்து, பதிவு செய்த மொபைல் போன் எண்ணை பதிவிட வேண்டும். பின், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
இதையடுத்து, மின் பயன்பாடு கணக்கெடுத்ததில் இருந்து, 10வது நாளில் மின் கட்டணம் தானாகவே, வங்கி கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும்.
இந்த வசதியை, வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில் இடம்பெறும் அனைத்து நுகர்வோரும் பயன்படுத்தலாம்.
