மாங்காடில் பாதாள சாக்கடை பணி தொடங்காததால் ஏமாற்றம்! ரூ.225 கோடி ஒதுக்கியும் நீதிமன்ற வழக்கால் நிறுத்தம்
மாங்காடில் பாதாள சாக்கடை பணி தொடங்காததால் ஏமாற்றம்! ரூ.225 கோடி ஒதுக்கியும் நீதிமன்ற வழக்கால் நிறுத்தம்
UPDATED : ஜூன் 17, 2026 08:56 AM
ADDED : ஜூன் 16, 2026 10:26 PM

மாங்காடு: மாங்காடு நகராட்சியில், 225 கோடி ரூபாயில் பாதாள சாக்கடை திட்ட பணி தொடங்க இருந்த நிலையில், நீதிமன்ற வழக்கு காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனுடன் சேர்ந்து அறிக்கை தயாரிக்கப்பட்ட திருவேற்காடு, பூந்தமல்லி நகராட்சிகளில் பணிகள் நடந்து வரும் நிலையில், மாங்காடில் மட்டும் பணி தொடங்காததால், மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட மாங்காடு நகராட்சியில் 27 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மேலும், மாங்காடில் புதிய குடியிருப்புகளின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால், இந்த நகராட்சியில் மக்கள் தொகை எண்ணிக்கை, அடுத்த சில ஆண்டுகளில் மேலும் உயரும் என கணிக்கப்படுகிறது.
இந்நிலையில், இங்கு பாதாள சாக்கடை திட்டம் இல்லை. இதனால், குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக நீர்நிலைகள், காலி நிலங்களில் தேங்கி நிற்பதால் நிலத்தடி நீர் பாதிப்படைவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.
அதனால், மாங்காடில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க வேண்டும் என, 10 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், மாங்காடு நகராட்சி, அதன் அருகில் உள்ள திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சி, திருவேற்காடு நகராட்சியைச் சேர்த்து, ஜெர்மன் வங்கியின் நிதி உதவியுடன் 970 கோடி ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டம் அமைக்க முடிவானது.
அதன்படி, மாங்காடிற்கு 225 கோடி ரூபாய்; பூந்தமல்லிக்கு 282.75 கோடி ரூபாய் மற்றும் திருவேற்காடு நகராட்சிக்கு 462.99 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
இந்நிலையில், பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிக்கு பாதாள சாக்கடை அமைக்கும் திட்டப் பணி, கடந்த மார்ச் 14ல் பூமி பூஜை போடப்பட்டது. இதையடுத்து பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், மாங்காடு நகராட்சியின் பாதாள சாக்கடை திட்டத்திற்கு, பணி ஆணை வழங்காமல், நகராட்சி நிர்வாகத் துறை காலம் தாழ்த்தி வருகிறது.
ஒரே நேரத்தில் மூன்று நகராட்சிகளுக்கு பாதாளா சாக்கடை திட்டம் அறிவிக்கப்பட்டு, இரண்டு நகராட்சிகளில் பணி நடந்து வரும் நிலையில், மாங்காடிற்கு மட்டும் பணி தொடங்காமல் இருப்பதால் மாங்காடு மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மாங்காடு நகராட்சி மக்கள் கூறுகையில், 'பாதாள சாக்கடை திட்டம் அமைந்தால், மாங்காடு நகராட்சியின் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். எங்கள் நகராட்சிக்கு மட்டும் பணியை தாமதப்படுத்துவது சரியில்லை. பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்' என்றனர்.
நகராட்சிகள் மண்டல நிர்வாக இயக்குனர் ஒருவர் கூறுகையில், 'மாங்காடு நகராட்சி பாதாள சாக்கடை திட்டம், நீதிமன்ற வழக்கு காரணமாக பணி ஆணை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் பணி ஆணை வழங்கி, பணிகளை துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
