ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்கள் விடுவிப்பால் குமுறல்:புதிய கல்வியாண்டில் பணிகள் பாதிப்பதாக புகார்
ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்கள் விடுவிப்பால் குமுறல்:புதிய கல்வியாண்டில் பணிகள் பாதிப்பதாக புகார்
UPDATED : மே 13, 2026 04:31 AM
ADDED : மே 12, 2026 05:10 PM

வேடசந்துார்:அரசு பள்ளிகளில் கல்வியாண்டு நிறைவில் ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவதால் மாணவர்களுக்கு டி.சி., வழங்குதல், புதிய மாணவர்களை சேர்த்தல், இலவச பாடப்புத்தகங்களை கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்படுவதாக குமுறல் எழுந்துள்ளது.
வேடசந்துார்:அரசு பள்ளிகளில் கல்வியாண்டு நிறைவில் ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவதால் மாணவர்களுக்கு டி.சி., வழங்குதல், புதிய மாணவர்களை சேர்த்தல், இலவச பாடப்புத்தகங்களை கொண்டு வருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்படுவதாக குமுறல் எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என 1226 பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.2025 - 26 கல்வியாண்டில் ஏப். 16ல் தேர்வுகள் முடிந்தன. ஏப். 25 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்றனர். தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. 2026 - 27 புதிய கல்வியாண்டு ஜூன் 1ல் துவங்குகிறது.
ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் ஏப்ரல் முடிவில் ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்கள் விடுமுறை காலமான மே மாதத்தை பணிக்கணக்கில் முடித்து விட்டு ஓய்வு பெறுவர்.இம்மாதத்தில் மாணவர்களுக்கு டி.சி., வழங்குதல், புதிய மாணவர்களை சேர்த்தல், அரசின் இலவச பாடபுத்தகங்களை பெறுதல், கிராமப்புறங்களுக்கு சென்று அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், சலுகைகள் குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி புதிய மாணவர்களை சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை தலைமை ஆசிரியர்கள் கவனித்து வந்தனர்.இந்நிலையில் தமிழக அரசு நிதி நிலையை காரணம் காட்டி கடந்த கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களை உடனடியாக விடுவித்தது. விடுமுறையான மே மாதத்திற்கு சம்பளம் வழங்க வேண்டும் என்பதால் இந்த நடைமுறையை கையாண்டது.
ஆனால் கல்வித்துறையை பொறுத்தவரை ஏற்கத்தக்கது அல்ல. இதனால் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பள்ளியில் படித்து முடித்த மாணவர்கள் உடனடியாக டி.சி., வாங்கிச்செல்ல முடிவதில்லை. வேறு பள்ளிகளில் படித்து இடையில் வந்து சேரும் மாணவர்கள் சேர்ப்பதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் பள்ளி வளாகம் , சுற்றுப்புறம், குடிநீர் தொட்டிகள், கழிப்பறை பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் இல்லாததால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.மாணவர்களின் கல்வி நலன் கருதி அடுத்த கல்வியாண்டு துவங்கும் வரை தலைமை ஆசிரியர்கள் பணியில் இருப்பது தான் நல்லது. இல்லை எனில் மாணவர் சேர்க்கையின்றி பள்ளிகள் மூடும் நிலைக்கு தள்ளப்படும். இதனை புதிதாக பொறுப்பேற்று உள்ள அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

கவனம் செலுத்தலாமே
கடந்த காலங்களில் அரசு பள்ளிகளில் ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்கள் மே 31 வரை பணியில் நீட்டிப்பு செய்யப்பட்டனர். ஆனால் கடந்த கல்வியாண்டில் தமிழக அரசு நிதி சிக்கனம் கருதி ஓய்வு பெறும் தலைமை ஆசிரியரை ஏப்ரல் மாதத்தோடு விடுவித்தது. இதனால் விடுமுறையான மே மாதத்தில் அவர்கள் கவனித்து வந்த பணிகள் நின்று போனது. பழைய நடைமுறையை தொடர ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றன.
- வீ.கோபிநாதன், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர், திண்டுக்கல் .
