ADDED : மார் 20, 2026 05:17 AM
ரெட்டியார்சத்திரம்: மக்காச்சோளம் கொள்முதல் விலை உயர துவங்கியுள்ளதால் சேகரிப்பில் வியாபாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி பகுதியில் சில ஆண்டுகளாக போதிய மழையின்மை, தண்ணீர் பற்றாக்குறை, கொளுத்தும் வெயில் என விவசாயிகள் ஏராளமான பிரச்னைகளை எதிர்கொண்டனர். காய்கறி, பூ, பயறு வகை சாகுபடியை தவிர்த்து மக்காச்சோளத்திற்கு மாறினர். படைப்புழு, வறட்சி பிரச்னைகளால் வேளாண் பணியில் ஏமாற்றம் தொடர்ந்தது. இந்தாண்டு தாமதமான பருவமழை, முளைப்பு திறன் பாதிப்பு, அதிக வெயில், போதிய மழையின்றி சாகுபடி பாதிப்பு பிரச்னையால் விவசாயிகள் கவலையில் இருந்தனர்.
சில வாரங்களாக அறுவடை பணி மும்முரமாக நடக்கிறது. இருப்பினும் போதிய விலை கிடைக்காமல் கடந்தாண்டை விட தலா ஒரு மூடைக்கு 600 ரூபாய் வரை கொள்முதல் விலை குறைந்தது.
தற்போது அறுவடை இறுதிநிலை எட்டியுள்ள சூழலில் கொள்முதல் செய்வதில் வியாபாரிகளிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. நேற்று நிலவரப்படி மூடை ஆயிரத்து 800 வரை உயர்ந்துள்ளது.
குரும்பபட்டி விவசாயி குமார் கூறுகையில், வடமாநிலங்களில் உற்பத்தி பாதிப்பால் கடந்தாண்டு மகசூல் குறைந்த போதும் ஓரளவு விலை கிடைத்தது.
இந்தாண்டு மகசூல் 60 சதவீதம் பாதித்தது. இருப்பினும் விலை கிடைக்காமல் ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது கடந்த வாரத்தை விட தலா ஒரு மூடைக்கு 300 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. விரைவில் ரூபாய் 2 ஆயிரத்தை எட்ட வாய்ப்புள்ளது. வியாபாரிகளால் மட்டுமே சேமிக்க முடியும். விவசாயிகளுக்கான சேமிப்பு வசதி இல்லாததால், இதன் பலனை வியாபாரிகள் மட்டுமே பெற முடிகிறது என்றார்.

