பாடப்புத்தகம், சீருடைகளை பெற ஆசிரியர்கள் அலைக்கழிப்பு
பாடப்புத்தகம், சீருடைகளை பெற ஆசிரியர்கள் அலைக்கழிப்பு
UPDATED : ஜூன் 03, 2026 02:34 PM
ADDED : ஜூன் 02, 2026 09:01 PM

வேடசந்துார்:அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம், நோட்டு, புத்தகப்பை, சீருடைகளை அந்தந்த பள்ளிகளுக்கு வாகனங்களில் கொண்டு சென்று நேரடியாக வழங்க அரசு ஆணை இருந்தும் வட்டார கல்வி அலுவலகத்திற்கு வந்து பெற்று செல்லும்படி அலைக்கழிப்படுவதாக ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு கல்வி ஆண்டும் பாடப்புத்தகம், நோட்டு, புத்தகப்பை, சீருடை, காலணி உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் இருக்கக் கூடாது, புத்தகச்சுமையை தவிர்க்க வேண்டும் என்பதற்காக முதல், இரண்டாம், மூன்றாம் என மூன்று பருவங்களாக பிரித்து பாடப்புத்தகங்களை வழங்கி தேர்வு நடத்தப்படுகிறது.
அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்ட மாணவர்களுக்கான சத்துணவு பொருட்கள் 10க்கு குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளுக்கு கூட வாகனங்களில் நேரடியாக கொண்டு சென்று வழங்கப்படுகின்றன.
ஆனால் கல்வி ஆண்டின் முதல் பருவத்தில் இலவச பாடப்புத்தகம், நோட்டு, சீருடை, காலணி உள்ளிட்ட பொருட்களை பள்ளிகளுக்கு நேரடியாக வாகனங்களில் அனுப்பி வைக்காமல் வட்டார கல்வி அலுவலகங்களிலேயே வைத்துக் கொண்டு ஆசிரியர்களை நேரில் பெற்றுச்செல்லும்படி கூறுவது இன்றளவும் நீடிக்கிறது.
இதனை அந்தந்த பள்ளிகளுக்கே வாகனங்களில் கொண்டு சென்று இறக்கி வைக்க அரசு நிதி அளித்தும் அதை செயல்படுத்தாமல் ஆசிரியர்களை அலைக்கழிப்பதாக குமுறுகின்றனர்.
அந்தந்த பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்களை ஆசிரியர்களே சொந்த செலவில் எடுத்துச் சென்றால் மொத்த செலவினக் கணக்கை அலுவலகத்தில் எழுதிக் கொள்ளலாம் என்ற நீண்டகால நடைமுறை இன்னும் மாறவில்லை.
ஆட்சி மாறியும் அதே காட்சி தான் தொடர்கிறது எனக்கூறும் ஆசிரியர்கள் இரண்டாவது பருவத்திற்கான பாடப்புத்தகங்களையாவது அந்தந்த பள்ளிகளுக்கே நேரடியாக சென்று வழங்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
-----------------
பிற பணிகளில் ஆசிரியர்கள் ஏன் கல்வி உரிமை சட்டப்படி ஆசிரியர்களின் வேலை என்பது பாடம் நடத்துவது தான். பிற வேலைகளில் அவர்களை பயன்படுத்தினால் மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்கப்படும் என இச்சட்டம் வலியுறுத்துகிறது. இலவச பாடப்புத்தகங்களை அந்தந்த பள்ளிகளுக்கே கொண்டு சென்று இறக்கி வைக்கும் வகையில் அரசு நிதி ஒதுக்குகிறது. அதை முறையாக செய்யாமல் ஆசிரியர்களை இவ்வாறு வேலை வாங்குவது மாற வேண்டும். வரும் காலங்களில் ஆவது பள்ளிகளுக்கே சென்று பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சக்திவேல், சமூக ஆர்வலர், வேடசந்துார்.
