/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பழமையான மாட்டு சந்தை புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்!விரைந்து பயன்பாட்டுக்கு விட எதிர்பார்ப்பு
/
பழமையான மாட்டு சந்தை புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்!விரைந்து பயன்பாட்டுக்கு விட எதிர்பார்ப்பு
பழமையான மாட்டு சந்தை புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்!விரைந்து பயன்பாட்டுக்கு விட எதிர்பார்ப்பு
பழமையான மாட்டு சந்தை புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்!விரைந்து பயன்பாட்டுக்கு விட எதிர்பார்ப்பு
ADDED : அக் 20, 2025 11:38 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சி மாட்டு சந்தையில், ெஷட் அமைத்தல் உள்ளிட்ட புதுப்பித்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
பொள்ளாச்சி நகராட்சிக்கு சொந்தமான காந்தி வாராந்திரச்சந்தை, 30.78 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு, ஆடுவதை செய்யுமிடம், லாரிப்பேட்டை, தினசரி காய்கறி மொத்த வியாபார அங்காடி உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.
இதில், 10 ஏக்கர் பரப்பளவில், கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக மாட்டுச்சந்தை செயல்படுகிறது. மாட்டுச்சந்தை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கூடுகிறது.
ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்கள்; தஞ்சாவூர், கும்பகோணம், ஒட்டன்சத்திரம், ஈரோடு, திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட நகரங்களிலிருந்து பல்வேறு ரக மாடுகள் விற்பனைக்கு வருகின்றன.
மாட்டுச்சந்தையில் செவ்வாய் கிழமையில் நான்காயிரத்துக்கு மேற்பட்ட மாடுகள்; வியாழக்கிழமைகளில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மாடுகளும் விற்பனைக்கு வருகின்றன.
இச்சந்தையில், வாரந்தோறும், மூன்று கோடி ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் நடைபெறுகிறது. பல்வேறு பகுதியிலிருந்து விவசாயிகளும், வியாபாரிகளும் வந்து செல்லும் மாட்டுச்சந்தையில், போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது.
மழைக்காலங்களில், மழைநீரும், சேறும் தேங்குவதால், வியாபாரிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். சேற்றில் நின்று வியாபாரம் செய்வதால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.
மேலும், அடிப்படை வசதிகளும் இல்லாததால், வியாபாரிகள், மாடு வாங்க வருவோர் வேதனைக்குள்ளாகின்றனர். புகழ்பெற்ற மாட்டு சந்தையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த பல ஆண்டுகாலமாக வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில், மாட்டு சந்தையை மேம்படுத்த, ஆறு கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அதில், மொத்தம், 2,000 மாடுகள் நிற்கும் வகையில், ஏழு ெஷட்கள், மாடுகளை இறக்க, 'ரேம்ப்' வசதி, வியாபாரிகள் மற்றும் மக்களுக்கான கழிப்பிட வசதி ஏற்படுத்தப்படுகிறது.
சாணம், கோமியம் சேகரிக்கும் வகையில், 'சேம்பர்' தனியாக கட்டப்படுகிறது. மாடுகள் எடுத்து வருவோர், தங்குமிட வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மாட்டு சந்தை வியாபாரம் பாதிக்காத வகையில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், ெஷட் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு ஓரளவு மட்டுமே கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், பாதியில் வேகமில்லை.
பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென வியாபாரிகள், நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், நகராட்சி கமிஷனர் குமரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகளை விரைவுப்படுத்த உத்தரவிட்டனர். அதன்படி தற்போது, ெஷட் அமைக்கும் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.பணிகள் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.