பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை
ADDED : ஜூன் 06, 2026 03:51 AM

வால்பாறை: வால்பாறையில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், மழை பாதிப்புக்களை தடுப்பது குறித்த ஆலோசனை கூட்டம், நகராட்சி கலையரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு நகராட்சி கமிஷனர் குமரன், தாசில்தார் அருள்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொள்ளாச்சி சப்-கலெக்டர் ராமகிருஷ்ணசாமி பேசியதாவது:
பருவமழை காலங்களில் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்க்க அனைத்து துறை அரசு அதிகாரிகளும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கனமழையின் போது ஆற்றோர பகுதியில் வசிக்கும் மக்கள் தங்குவதற்கு, சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும். வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் மண்சரிவு ஏற்படும் பட்சத்தில் அதை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
மழை பாதிப்புக்களை எதிர்கொள்ளும் வகையில் நகராட்சி நிர்வாகம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.
கூட்டத்தில், வருவாய்த்துறை, நகராட்சி,மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
