UPDATED : ஜூன் 09, 2026 11:39 PM
ADDED : ஜூன் 09, 2026 11:21 PM
மேட்டுப்பாளையம் -: கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 34, சின்ன வேடம்பட்டியில் தனியார் கம்பெனி டிரைவர். , இவர் நண்பருடன் கோவையில் இருந்து, மாலை, 5:55 மணிக்கு புறப்பட்ட பாசஞ்சர் ரயிலில் மேட்டுப்பாளையம் வந்தார். தான் கொண்டு வந்த பேக்கை, ரயிலில் மறந்து விட்டுச் சென்றார். இரவில் வீட்டுக்கு சென்ற பிறகு தான், பேக்கை தவற விட்டது கிருஷ்ணமூர்த்திக்கு தெரியவந்தது. ரயில் பெட்டிகளை சுத்தம் செய்த, ஊழியர்கள், கேட்பாரற்றுக் கிடந்த பேக்கை, ரயில்வே ஸ்டேஷன் மேலாளரிடம் ஒப்படைத்தனர். அந்த பேக்கில் மொபைல் போன், ஆதார் கார்டு, ஏ.டி.எம்., கார்டு, டிரைவிங் லைசன்ஸ் ஆகியவை இருந்தன.
நேற்றுக் காலை போன் சார்ஜ் போட்டு வைத்த போது, டிரைவர் கிருஷ்ணமூர்த்தி வேலை பார்த்து வரும் கம்பெனியிலிருந்து,மொபைல் போனுக்கு போன் செய்தனர். மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில், பேக் உள்ளது என, அதிகாரி தெரிவித்தார். மேட்டுப்பாளையம் வந்து, பேக்கை தவறவிட்ட கிருஷ்ணமூர்த்தி, பேக்கில் உள்ள பொருட்கள் குறித்து, அடையாளங்களை தெரிவித்தார். அதன் பின் ரயில்வே ஸ்டேஷன் மேலாளர், டிரைவர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேக்கை ஒப்படைத்தார்.
