ADDED : மே 18, 2026 08:22 PM
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே உள்ள நஞ்சுண்டாபுரத்தில் இயற்கை விவசாயத்தில் இடுபொருள்கள் பயன்பாடு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் வட்டார விவசாயிகளுக்கான அட்மா திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான இயற்கை வேளாண்மையில் இடுபொருள்கள் பயன்பாடு குறித்த பயிற்சி முகாம் நஞ்சுண்டாபுரம் சி.எம்.கே., திருமண மண்டபத்தில் நடந்தது.
உமா மகேஸ்வரி வரவேற்றார். தமிழ்நாடு வேளாண் பல்கலை பேராசிரியர் பரமேஸ்வரி, நம்மாழ்வார் பயிற்சி மையத்தில் நடைமுறையில் உள்ள இயற்கை வேளாண்மை பயன்படுத்துதல், இடுபொருள்கள் பற்றி தெளிவாக எடுத்து கூறினார்.
உர செலவை குறைத்து, நஞ்சில்லா உணவு உற்பத்திக்கான வழிமுறை, மற்றும் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைப்பதற்கான வழிமுறைகளை, கே.வி.கே. நிறுவன தொழில் நுட்ப வல்லுநர் துரைசாமி எடுத்துக் கூறினார். மேலும், பெரியநாயக்கன்பாளையம் துணை வேளாண் அலுவலர் சுரேஷ், விவசாய அடையாள எண் கட்டாயம் பெறுவது குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறினார்.
நிகழ்ச்சியில், வேளாண்மை துணை இயக்குனர் நிர்மலா, இயற்கை வேளாண்மை மேற்கொள்ளவும், விவசாயிகள் சிட்டா, ஆதார் இணைப்பு பற்றியும் விளக்கினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை தினகரன் மற்றும் மகேந்திரன் ஆகியோர் செய்து இருந்தனர்.
