ADDED : மே 20, 2026 09:54 PM

பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்தில், புலிகள் கணக்கெடுப்பு மேற்கொள்ள, தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம் சார்பில், நாடு முழுவதும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பை நடத்தி வருகிறது.
அந்த வகையில் இந்தாண்டுக்கான கணக்கெடுப்பு ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி உலாந்தி உள்ளிட்ட வனச்சரகங்களில், புலிகள் கணக்கெடுப்பு பணி, 736 தானியங்கி கேமரா வாயிலாக துவங்கப்பட்டுள்ளது.
ஆழியாறு அடர்ந்த வனப்பகுதியில் தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. வன விலங்குகள் அதிகம் நடமாடும் பாதைகள், நீர் நிலைகள், மண் சுவடுகளில் காணப்படும் இடங்கள் போன்ற பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
இந்த கேமராக்கள், வனவிலங்குகள் நகரும் போது தானாகவே புகைப்படம், வீடியோ பதிவு செய்யும் வசதி கொண்டவையாகும்.
இதில், புலிகள் உடலில் காணப்படும் தனித்துவமான வரி கோடுகள் வாயிலாக, ஒவ்வொரு புலியையும் தனித்தனியாக அடையாளம் காண முடியும் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
