ADDED : ஜூன் 13, 2026 02:28 AM

மாதவரம்: பள்ளி மாணவன் மாயமான வழக்கில், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று, மாதவரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மணலி, சின்னமாத்துாரைச் சேர்ந்த லென்ஸ்டின் ஜேக்கப், 15. மாதவரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
கடந்த 9ம் தேதி இரவு, பொருட்கள் வாங்குவதற்காக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தாய் புகாரையடுத்து, மாதவரம் பால்பண்ணை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், மாணவனை தேடும் பணியில் போலீசார் மெத்தனம் காட்டுவதாகக் கூறி, பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று, காவல் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த உதவி ஆணையர் விவேக்கண்ணன் உள்ளிட்ட போலீசார், மாணவனை கண்டுபிடிக்க சிறப்பு குழு அமைக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. மறியலின்போது மாணவனின் தாய் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
