UPDATED : ஜூன் 13, 2026 09:33 PM
ADDED : ஜூன் 13, 2026 09:32 PM
காசிமேடு: எண்ணுார், அன்னை சிவகாமி நகரைச் சேர்ந்தவர் செல்வம், 62; லாரி ஓட்டுநர். எண்ணுார் துறைமுகத்தில் லாரியில் நிலக்கரி ஏற்றி, திருப்போரூர் நோக்கி, நேற்று சென்று கொண்டிருந்தார்.
காசிமேடு, எஸ்.என்.செட்டி சாலையில் அடையாளம் தெரியாத 62 வயது முதியவர் மீது லாரி மோதியது. இதில் அங்கேயே அவர் இறந்தார். லாரியை நிறுத்தாமல் சென்றதால் ராயபுரம், கல்மண்டபம் அருகே, போக்குவரத்து போலீசார் லாரியை வழிமறித்து பிடித்தனர். ஓட்டுநர் செல்வத்தை கைது செய்தனர்.
----
வாலிபருக்கு கத்திக்குத்து; மூவர் கைது
வண்ணாரப்பேட்டை: கொருக்குப்பேட்டை பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ், 25. கடந்த 11ம் தேதி, வண்ணாரப்பேட்டை ரயில் நிலைய தண்டவாளப் பகுதியில் சென்றபோது, அவர் உதைத்த கல் அருகில் மது அருந்திக் கொண்டிருந்த சிலர் மீது விழுந்தது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறி, சந்தோஷை ஒருவர் கத்தியால் வெட்டி தப்பினார்.
காயமடைந்த சந்தோஷ், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்ட பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த விஜயகுமார், 26, அஜித், 23, ரஞ்சித் என்ற அப்பு, 20, ஆகியோரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடுகின்றனர்.
----
ஏ.டி.எம்., மிஷினை உடைத்தவர் கைது
கோயம்பேடு: அரும்பாக்கம், ரசாக் கார்டன் சாலையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரத்தை, மர்மநபர் ஒருவர் கடந்த 10ம் தேதி உடைத்து, பணம் திருட முயன்றார். முடியாததால் தப்பினார். கோயம்பேடு போலீசார் விசாரித்து, ஏ.எடி.எம்., இயந்திரத்தை உடைத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த விஜய், 23, என்பவரை கைது செய்தனர்.
--
9,400 போதை மாத்திரைகள் பறிமுதல்
அயனாவரம்: அயனாவரம் சாய்பாபா கோவில் அருகே, மாதவரத்தைச் சேர்ந்த சுல்தான் அலாவுதீன், 38, பெரம்பூர் அருள் ஜெஷ்டின், 29, சந்தோஷ்குமார், 19, ஆகியோர் சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்தனர்.
அவர்களை போலீசார் பிடித்து சோதித்ததில், விற்பனைக்காக 9,400 உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 100 போதை ஊசிகள் இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
