ADDED : மே 07, 2026 09:47 PM

புதுடில்லி: இந்தியாவின் வினேஷ் போகத், மீண்டும் போட்டிக்கு திரும்புவதில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 31. பாரிஸ் ஒலிம்பிக்கில் (2024) சிறப்பாக செயல்பட்ட இவர், ஒலிம்பிக் மல்யுத்த பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனையானார். துரதிருஷ்டவசமாக பைனலுக்கு முன், இவரது உடல் எடை 50 கிராம் அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
பின் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ், ஹரியானாவில் காங்., கட்சியில் இணைந்து எம்.எல்.ஏ., ஆனார். தற்போது ஓய்வு முடிவை திரும்ப பெற்ற இவர், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் (2028) பங்கேற்கும் வகையில், மீண்டும் மல்யுத்த போட்டியில் களமிறங்க உள்ளார். உ.பி.,யின் கோண்டா நகரில் மே 10--12ல் நடக்கவுள்ள சீனியர் ரேங்கிங் தொடரில் 57 கிலோ எடைப்பிரிவில் களமிறங்குகிறார்.
இத்தொடரில் வினேஷ் போகத் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விளையாட்டு நட்சத்திரங்கள் ஓய்வு முடிவை திரும்ப பெற்று மீண்டும் போட்டியில் பங்கேற்க விரும்பினால், சம்பந்தப்பட்ட சர்வதேச கூட்டமைப்பு, தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பிடம், 6 மாதத்திற்கு முன் எழுத்துப்பூர்வமாக அறிவித்து, தன்னை ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என, உலக ஊக்கமருந்து தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் சிங் கூறுகையில், ''உலக ஊக்கமருந்து தடுப்பு பிரிவின் விதிமுறையை பின்பற்றினால் மட்டுமே வினேஷ் போகத் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார். உலக மல்யுத்த கூட்டமைப்பின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்,'' என்றார்.
