ADDED : மே 11, 2026 10:46 PM

மும்பை: கிரிக்கெட் லீக் தொடரில் இம்முறை பேட்டர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதுவரை 46 முறை, ஒரு இன்னிங்சில் 200 அல்லது அதற்கு மேல் ரன் குவிக்கப்பட்டுள்ளது. பும்ரா, ரபாடா, ஸ்டார்க், ஆர்ச்சர் உள்ளிட்ட உலகின் தலைசிறந்த பவுலர்களுக்கு எதிராக எளிதாக ரன் சேர்க்கின்றனர்.
இந்திய ஜாம்பவான் கவாஸ்கர் கூறுகையில், ''பொதுவாக 'டி-20' போட்டியில், பவுலர்களுக்கு 4 ஓவர் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால் துவக்க வீரராக களமிறங்கும் பேட்டர், 20 ஓவர் பேட் செய்ய முடிகிறது. பவுலர்களுக்கும் கூடுதல் ஓவர் வழங்கப்பட வேண்டும். ஒரு போட்டியில் 3 அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றும் பவுலருக்கு, கூடுதலாக ஒரு ஓவர் வழங்கலாம். இதனால் எதிரணியின் ரன் வேட்டையை தடுக்கலாம் அல்லது விக்கெட் கைப்பற்றலாம்,'' என்றார்.
மும்பை சோபிக்காதது ஏன்
ராய்ப்பூர்: ராய்ப்பூரில் நடந்த கிரிக்கெட் லீக் போட்டியில், மும்பை அணி, பெங்களூருவிடம் தோல்வியடைந்தது. இதுவரை விளையாடிய 11 போட்டியில், 3ல் மட்டும் வென்ற, மும்பை அணியின் 'பிளே-ஆப்' வாய்ப்பு முடிவுக்கு வந்தது.
மும்பை அணியின் தலைமை பயிற்சியாளர் ஜெயவர்தனே கூறுகையில், ''இந்த சீசன் எங்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. கிடைத்த வெற்றி வாய்ப்புகளை வீணடித்துவிட்டோம். பேட்டிங், பவுலிங்கில் சீராக செயல்படாதது தோல்விக்கு காரணம். முன்னணி வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் வெற்றியை பாதித்தது. இத்தோல்விக்கு யாரையும் குறை கூற விரும்பவில்லை. ஒரு அணியாக இணைந்து சிறப்பாக செயல்பட தவறிவிட்டோம்,'' என்றார்.
சாதிக்க உதவிய கார்த்திக்
ராய்ப்பூர்: மும்பைக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணியின் குர்ணால் பாண்ட்யா, 46 பந்தில் 73 ரன் (5X6, 4X4) குவித்து வெற்றிக்கு கைகொடுத்தார். பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளர், ஆலோசகராக, தமிழக விக்கெட் கீப்பர் பேட்டர் தினேஷ் கார்த்திக் உள்ளார்.
குர்ணால் பாண்ட்யா கூறுகையில், ''கடந்த இரண்டு சீசனில் பெங்களூரு அணி வீரர்களின் பேட்டிங் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இதற்கு, பேட்டிங் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக்கின் பங்களிப்பு முக்கியமானது. ஒவ்வொரு வீரரின் பலம், பலவீனத்திற்கு ஏற்ப ஆலோசனை வழங்குகிறார். இதனால் பின்வரிசையில் களமிறங்கும் வீரர்களும் பேட்டிங்கில் கைகொடுக்கின்றனர்,'' என்றார்.
