பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் * ஆப்கானிஸ்தான் டெஸ்டில் சாதிக்க
பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் * ஆப்கானிஸ்தான் டெஸ்டில் சாதிக்க
ADDED : ஜூன் 03, 2026 10:40 PM

புதிய சண்டிகர்: ஆப்கானிஸ்தான் டெஸ்டில் சாதிக்க சிராஜ், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்தியா மண்ணில், ஆப்கானிஸ்தான் அணி, ஒரு டெஸ்ட் (ஜூன் 6-10, புதிய சண்டிகர்), மூன்று ஒருநாள் போட்டிகள் (ஜூன் 14, 17, 20, இடம்: தர்மசாலா, லக்னோ, சென்னை) கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இரு அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி புதிய சண்டிகரில் நடக்க உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் நேற்று பயிற்சியை துவக்கினர்.
கடந்த இரு மாதம் கிரிக்கெட் லீக் தொடரில் பங்கேற்ற இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் பணிச்சுமை குறித்து கேள்வி எழுந்தது. இந்நிலையில், வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா என இருவரும், முழு 'வேகத்தில்' பயிற்சியில் ஈடுபட்டனர். வெயில் அதிகளவு இருந்த போதும், 25 நிமிடம் பந்துவீச்சில் ஈடுபட்டனர். இதனால் சிராஜ், பிரசித் கிருஷ்ணா என இருவரது 'பிட்னஸ்' குறித்து கவலையில்லை எனத் தெரிகிறது.
6 அடி, 5 இன்ச் உயரமுள்ள வேகப்பந்து வீச்சாளர் குர்னுார் பிரார், சரியான 'லென்த்தில்', பந்துகளை பவுன்சர்களாக வீசி, அனைவரையும் கவர்ந்தார். இவரது வேகத்தில் 'சீனியர்' ராகுல் திணறினார்.
இதேபோல ஜம்மு அண்டு காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் அகிப் நபியும் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டார். ஆப்கானிஸ்தான் டெஸ்டில் அறிமுக வாய்ப்பு பெறுவார் என நம்பப்படும் சுழற்பந்து வீச்சாளர் ஹர்ஷ் துபே, மானவ் சுதர் என இருவரும் வலைப்பயிற்சியில் பந்துவீச, பயிற்சியாளர் காம்பிர், கண்காணித்துக் கொண்டிருந்தார்.
சுப்மன் பேட்டிங்
இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பேட்டிங் செய்ய, பிரின்ஸ் யாதவ் பந்து வீசினார். சமீபத்தில் காயத்தால் அவதிப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவும், வலைப்பயிற்சியில் பங்கேற்று இருந்தார்.
