ADDED : மே 13, 2026 10:42 PM

சென்னை: சென்னை அணியில் 'ஆல்-ரவுண்டர்' ராமகிருஷ்ணா கோஷ் இடம் பெற்றிருந்தார். சமீபத்தில் (மே 3) மும்பைக்கு எதிரான போட்டியில் வலது காலில் காயமடைந்த இவர், கிரிக்கெட் லீக் தொடரில் இருந்து பாதியில் விலகினார். இவருக்கு பதிலாக கர்நாடகா 'ஆல்-ரவுண்டர்' மேக்நீல் நோரன்ஹா 24, தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், ரூ. 30 லட்சத்திற்கு சென்னை அணியில் ஒப்பந்தமானார். சி.கே. நாயுடு டிராபியில் (2024-25) அதிக விக்கெட் கைப்பற்றிய நோரன்ஹாவுக்கு, சமீபத்தில் பி.சி.சி.ஐ., சார்பில் எம்.ஏ. சிதம்பரம் டிராபி விருது வழங்கப்பட்டது. சையது முஷ்தாக் அலி டிராபியில் கர்நாடகா சார்பில் களமிறங்கிய இவர், திரிபுராவுக்கு எதிரான போட்டியில் 34 ரன், ஒரு விக்கெட் என, 'ஆல்-ரவுண்டராக' கைகொடுத்தார்.
'சிக்சர் மன்னன்' வைபவ்
புதுடில்லி: சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியின் வைபவ் சூர்யவன்ஷி, சிராஜ் பந்தில் ஒரு சிக்சர் விளாசினார். தொடர்ந்து அசத்திய வைபவ், ரபாடா ஓவரில் வரிசையாக 2 சிக்சர் பறக்கவிட்டார். இம்முறை விளையாடிய 11 போட்டியில், 40 சிக்சர் பறக்கவிட்டுள்ளார்.
குஜராத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ரபாடா கூறுகையில், ''வைபவ் சூர்யவன்ஷி திறமையான வீரர். பேட்டிங்கின் போது அவரது கைகளின் அசைவுகள் மிகவும் வேகமாக செயல்படுகின்றன. இதனால் எளிதாக சிக்சர் மழை பொழிகிறார். எந்த ஒரு பவுலர் குறித்தும் பயப்படாமல் பேட் செய்கிறார். இதனால் இவரால் ரன் சேர்க்க முடிகிறது,'' என்றார்.
பாட் கம்மின்சிற்கு அபராதம்
ஆமதாபாத்: ஆமதாபாத்தில் நடந்த குஜராத் அணிக்கு (168/5) எதிரான போட்டியில், 86 ரன்னுக்கு சுருண்ட (14.5 ஓவர்) ஐதராபாத் அணி 82 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் ஐதராபாத் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீச தவறியது. தாமதமாக பந்துவீசிய குற்றத்திற்காக ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்சிற்கு, போட்டி சம்பளத்தில் இருந்து ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
குஜராத் அணிக்கு பாராட்டு
ஆமதாபாத்: கிரிக்கெட் லீக் போட்டியில் பவுலிங்கில் அசத்திய குஜராத் அணி, ஐதராபாத் அணியை 86 ரன்னுக்கு சுருட்டியது. குஜராத் அணி சார்பில் ரபாடா, ஜேசன் ஹோல்டர் தலா 3, பிரசித் கிருஷ்ணா 2, முகமது சிராஜ், ரஷித் கான் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
ஐதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி கூறுகையில், ''முதல் பாதியில் எங்கள் ஐதராபாத் அணியின் பவுலிங் செயல்பாடு திருப்தி அளித்தது. ஆனால் பேட்டிங்கில் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தால் எழுச்சி பெற முடியவில்லை. இப்போட்டியில் குஜராத் அணி பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினர். துவக்கத்தில் இருந்தே எங்கள் பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்தது,'' என்றார்.
