அங்கன்வாடி ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க கோரிக்கை
அங்கன்வாடி ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம் வழங்க கோரிக்கை
ADDED : மே 23, 2026 04:08 AM
புதுச்சேரி: அங்கன்வாடி ஊழியர்களுக்கு நிலுவை சம்பளத்தை வழங்க கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நாஜிம் எம்.எல்.ஏ., வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரி மகளிர் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை கீழ் மாநிலத்தில் 855 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இங்கு 1,200 அங்கன்வாடி ஆசிரியர்கள், உதவியாளர்கள் பணிபுரிகின்றனர். அங்கன்வாடி மையங்களில் 6 வயதிற்குட்பட்ட 23,168 குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி புகட்டப்பட்டு வருகிறது.
அங்கன்வாடி பணியாளர்கள் அரசின் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு நேரடியாக கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றுகின்றனர். பல்வேறு கணக் கெடுப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இப்படி கடுமையாக பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே என 4 மாத சம்பளம் வழங்காததால் நிலைகுலைந்துபோய் உள்ளனர்.
அங்கன்வாடி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. சட்டசபை தேர்தலை யொட்டி தடையில்லாமல் சம்பளம் வழங்க அனைத்து அரசு துறைகளும் நடவடிக்கை எடுத்து இருக்கும்போது, அங்கன்வாடி ஊழியர்களுக்கு மட்டும் சம்பளம் வழங்காமல் நிறுத்தியது ஏன். இதனை மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு துறை விளக்க வேண்டும். இந்த விவகாரத்தில் உடனடியாக கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்க சாமி தலையிட்டு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
