புதுச்சேரி தேர்தலை பார்வையிட்ட 6 வெளிநாடுகளின் பிரதிநிதிகள்
புதுச்சேரி தேர்தலை பார்வையிட்ட 6 வெளிநாடுகளின் பிரதிநிதிகள்
ADDED : ஏப் 09, 2026 10:45 PM

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தல் நடைமுறைகளை 6 நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.
இந்தியாவில் நடக்கும் தேர்தல்களைப் பார்வையிட சர்வதேச தேர்தல் பார்வையாளர் திட்டத்தின் கீழ் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வருகை தருகின்றனர். புதுச்சேரி சட்டசபை தேர்தலை பார்வையிட, கிர்கிஸ் குடியரசு, ஐவரி கோஸ்ட், மால்டோவா, மங்கோலியா, பூடான், கயானா உள்பட 6 நாடுகளை சேர்ந்த 9 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் புதுச்சேரி வந்தனர்.
புதுச்சேரி தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கனை நேரில் சந்தித்து கலந்துரையாடினர். நேற்று ஓட்டுச்சாவடிகளை பார்வையிட்டு, அனைத்தையும் கேட்டறிந்தனர். தனித்துவமான வ.உ.சி., ஓட்டுச்சாவடியை பார்வையிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் தேர்தல் துறைக்கு பாராட்டு தெரிவித்தனர்.
பின் ஓட்டு பதிவு, ஓட்டு எண்ணிக்கை நடைமுறைகளை தேர்தல் அதிகாரிகளுடன் கலந்துரையாடி தெரிந்து கொண்டனர். இந்திய தேர்தல் ஆணையம் இந்தத் திட்டத்தின் மூலம், இந்தியாவின் தேர்தல் நடைமுறைகள், தொழில்நுட்பம் மற்றும் வெளிப்படைத்தன்மையை வெளிநாட்டினருக்குக் காண்பித்து, ஜனநாயக வலுப்படுத்துதல் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
