தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மலையேற்றத்தில் மலைக்க வைக்கும் புதுச்சேரி வீராங்கனை திவ்யா

 மலையேற்றத்தில் மலைக்க வைக்கும் புதுச்சேரி வீராங்கனை திவ்யா

 மலையேற்றத்தில் மலைக்க வைக்கும் புதுச்சேரி வீராங்கனை திவ்யா


ADDED : பிப் 05, 2026 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2026 06:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மலை சிலருக்கு அது கனவு. சிலருக்கு அது சவால். புதுச்சேரியின் கூனிச்சம்பட்டு பகுதியைச் சேர்ந்த 29 வயதேயான மலையேற்ற வீராங்கனை திவ்யாவுக்கு — மலை வாழ்க்கையின் திசைகாட்டி. 5 அடி உயரம் கொண்ட திவ்யா, மலையேற்றத்தில் இளம் வயதிலேயே தொட்ட உச்சம் பிரம்மிக்க வைக்கிறது.

கடந்தாண்டு ஐரோப்பா கண்டத்தின் மிக உயர்ந்த மலையான, ரஷ்யாவின் காகசஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள எல்ப்ரஸ் சிகரத்தில் 5,642 மீட்டர் உயரம் ஏறி அசத்தினார். இதன் மூலம் ஐரோப்பா கண்டத்தின் மிக உயர்ந்த மலையில் ஏறிய முதல் புதுச்சேரி பெண் என்ற பெருமையை திவ்யா பெற்றார்.

அடுத்து கார்கிலில் உள்ள மவுண்ட் குன் மலை சிகரத்திலும் 7,077 மீட்டர் உயரம் ஏறி வியப்பில் ஆழ்த்தினார். அடுத்து எவரெஸ்ட்டின் 8,848.8 மீட்டர் மலையிலும், மண்ட் லோட்சே மலையான 8,516 மீட்டர் உயரம் சிகரங்களில் ஏறவும் திட்டமிட்டு அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து மலையேற்ற வீராங்கனை திவ்யா கூறுகையில், 'படித்தது வளர்ந்தது எல்லாம் புதுச்சேரி தான். கூனிச்சம்பட்டு தான் பூர்வீகம்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி மலையில் உள்ள வன துர்க்கையம்மன் கோவில் தான் தாத்தாவின் குல தெய்வம். எனவே நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்த மலைக்கு போய்விடுவோம். அப்படிதான் கொஞ்சம் கொஞ்சமாக மலையேறும் ஆர்வம் எனக்குள் விதையாக விழுந்து முளைத்தது. அந்த மலையில் நீண்ட நேரம் குடும்பத்துடன் ஏறுவது, செலவிடுவது ரொம்ப அலாதியானது.

அப்புறம் லாஸ்பேட்டை மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி டிப்ளமோ ஆர்க்கிடெச்சுரல் அசிஸ்டன்ஸ்சிப் முடித்த பிறகு, புனேவில் இன்டன்ஷிப் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அங்கு 900 கி.மீ., தொலைவிற்கு பரவி கிடக்கும் சையாதிரி மலை தொடர் உண்மையில் பசுமை போர்த்திய இரண்டாவது சொர்க்கம். அங்கும் வார விடுமுறையில் தவறாமல் போய்விடுவேன். அப்படியே எல்லா மலைபகுதிகளிலும் தவறாமல் ஏறிவிடுவேன்.

அங்கு தான் மலையேற்றத்தை முறையாக புரிந்து கொள்ள முடிந்தது, இன்றைக்கு இந்த அளவிற்கு என்னை சாதிக்கும் அளவிற்கு கொண்டு வந்துள்ளது. அடுத்து எவரெஸ்ட் உள்ளிட்ட இரண்டு மலைகளின் சிகரம் ஏற வேண்டும் என்பதே என்னுடைய கனவு.இதற்கு ரூ. 57 லட்சம் செலவாகும். எனவே அந்த தொகை ஸ்பான்சர்ஷிப் திரட்ட வேண்டும். இது தான் இப்போது என் முன் உள்ள ஒரே சவால்.

இந்த தொகை பெரிதாக தோன்றலாம். மற்றவர்களை ஒப்பிடும்போது மலையேற்றத்தில் இது ரொம்ப குறைவு. என்னுடைய உடைமைகளை 60 சதவீதத்தை நானே தான் துாக்கிச் செல்ல போகிறேன். அதனால் தான் இவ்வளவு செலவு குறைவு. இல்லையெனில் ரூ.80 லட்சத்திற்கு மேல் போகும். இந்த இரண்டு 8 ஆயிரம் அடி உயரம் மலை சவாலை எதிர்கொண்டு விரைவில் எவரெஸ்ட் சிகரத்திலும் கால் பதிப்பேன்.

பெண்ணாக இருந்து எப்படி மலையேற்றத்தில் சாதிக்கின்றீர்கள் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.ஆர்வம் இருந்தால்,மலையேற்றம் மட்டும் அல்ல எல்லா துறைகளிலும் பெண்களால் சாதிக்க முடியும். அதற்கு நானே உதாரணம்.

எவரெஸ்ட் சிகரம் ஏறிய பிறகு உலகின் டெட்லியான சிகரமான நேபாளத்தின் 8,090 மீட்டர் உயரம் கொண்ட அன்னாபூர்ணா மலை சிகரத்தை ஏற திட்டமிட்டுள்ளேன்.

எவரெஸ்ட் உயரமானது…ஆனால் அன்னபூர்ணா கொடூரமானது. எவரெஸ்ட் உயரமாக இருந்தாலும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை ஏறியுள்ளனர்.

ஆனால் அன்னபூர்ணா அப்படி அல்ல. அன்னபூர்ணாவில் இதுவரை மொத்தமே 475 பேர் தான் ஏறியுள்ளனர். அதில் 75 பேர் இறந்தேபோய் விட்டனர். இந்த அன்னபூர்ணா மலையை ஒரு கை பார்த்துவிடுவோம் என்று கண் சிமிட்டியப்படி சிரிக்கிறார் திவ்யா... அந்த சிரிப்பில் பயம் இல்லை… தன்னம்பிக்கை மட்டுமே பளீச்சிடுகிறது.

பெஸ்ட் ஆப் லக் திவ்யா...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us