புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்கியது பொதுமக்களே முன் வந்து தகவல்களை பதிவு செய்யலாம்
புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்கியது பொதுமக்களே முன் வந்து தகவல்களை பதிவு செய்யலாம்
ADDED : மே 18, 2026 04:50 AM

புதுச்சேரி: மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் கட்டப் பணிகள் புதுச்சேரியில் நேற்று துவங்கியது.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, சுய கணக்கெடுப்பு, நேரடி கள ஆய்வு என இரண்டு நிலைகளில் நடத்தப்படுகிறது. முதல் நிலை கணக்கெடுப்பினை பொருத்தவரை, பொதுமக்கள் தாங்களே https://se.census.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தகவல்களை பதிவு செய்யும் சுய கணக்கெடுப்பாகும்.
இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு, நேற்று புதுச்சேரியில் துவங்கியது. இதனை கவர்னர் கைலாஷ்நாதன் மக்கள் மாளிகையில் துவக்கி வைத்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டத்தின் இயக்குநர் சுந்தரேஷ் பாபு, சப் கலெக்டர் சுதாகர் மற்றும் இணை இயக்குனர் புவனேஸ்வரி கலந்து கொண்டனர்.
வரும் மே 31ம் தேதி வரை பொதுமக்கள் தாங்களே முன் வந்து இணையதளத்தில் பதிவு செய்யலாம். இந்த கணக்கெடுப்பின்போது வீட்டு அமைப்பு, குடிநீர் வசதி, கழிப்பறை, சமையல் எரிபொருள், மின்சாரம் மற்றும் இணைய வசதி உள்ளிட்ட மொத்தம் 33 விவரங்கள் சேகரிக்கப்படும்.
இரண்டாம் நிலை கணக்கெடுப்பு அலுவர்கள் வரும் ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை நேரடியாக வீடு வீடாக சென்று தகவல்களைச் சேகரிப்பார்கள்.
இந்தக் கணக்கெடுப்பின் போது, வீட்டு அமைப்பு, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சமையல் எரிபொருள், மின்சாரம், தொலைபேசி, இணைய வசதி, வாகனங்கள் மற்றும் இதர வசதிகள் உள்ளிட்ட மொத்தம் 33 முக்கிய விவரங்கள் சேகரிக்கப்படும்.
பயப்பட தேவையில்லை... மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம் 1948ன் படி கணக்கெடுப்பு அலுவலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொதுமக்கள் உண்மையான மற்றும் துல்லியமான பதில்களை வழங்குவது கட்டாயமாகும். தவறான தகவல் வழங்குவது, பணியைத் தடுப்பது அல்லது ஒத்துழைக்க மறுப்பது சட்டப்படி குற்றமாகும்.
பொதுமக்கள் வழங்கும் அனைத்துத் தகவல்களும் மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.
நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு துல்லியமான புள்ளிவிவரங்கள் மிக அவசியம்.
எனவே, புதுச்சேரி மக்கள் அனைவரும் தங்களை இந்த தேசியப் பணியில் ஈடுபடுத்திக்கொண்டு, சரியான தகவல்களை வழங்க வேண்டும். தகவல்களை கொடுப்பதால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
அரசின் திட்டங்கள் எதுவும் நிறுத்தப்படாது என, மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
