பட்டா - உட்பிரிவு மாற்றங்களில் புதுச்சேரியில் புதிய நடைமுறை
பட்டா - உட்பிரிவு மாற்றங்களில் புதுச்சேரியில் புதிய நடைமுறை
ADDED : மே 28, 2026 04:09 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் பட்டா மாறுதல் மற்றும் உட்பிரிவு செய்யும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பட்டா மாற்றம், உட் பிரிவு மாற்றம் செய்வது என்றால் அவ்வளவு தான். வருவாய் துறை அலுவலகங்களுக்கு நடையாய் நடக்க வேண்டும். அப்படி நடந்தாலும் ஆட்கள் இல்லை; அவர் லீவு-இவர் லீவு என்று ஆண்டு கணக்கில் இழுத்தடித்துவிடுவர்.
இதுபோன்ற சூழ்நிலையில் அனைத்து தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் மாகே, ஏானம் பிராந்தியங்களில் உள்ள துணை தாசில்தார் அலுவலகங்களில் பட்டா மாறுதல் மற்றும் நில உட்பிரிவு மனுக்களைக் கையாள்வதற்காக, நில அளவை மற்றும் நிலப் பதிவேடுகள் இயக்குனரகம் ஒரு விரிவான நிலையான செயல்பாட்டு நடைமுறையை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை முழுமையான வெளிப்படைத்தன்மை, முறையான ஆவணப் பராமரிப்பு மற்றும் பொதுமக்களுக்கான நிர்வாகத் தாமதங்களை முற்றிலுமாக தவிர்ப்பதை உறுதி செய்யும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வழிகாட்டுதலின்படி, ஒரு முக்கிய நடைமுறை மாற்றம் அமலுக்கு வருகிறது. அதன்படி, தாசில்தார் - துணை தாசில்தார் அலுவலகங்களில் இருந்து நில உட்பிரிவு கோப்புகளை மறு சரிபார்ப்புக்காக இந்த இயக்ககத்திற்கு அனுப்பும் பழைய நடைமுறை முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது.
வரும் காலங்களில், அனைத்து நில உட்பிரிவு மாறுதல்களும் அந்தந்த தாசில்தார்-துணை தாசில்தார் அலுவலக அளவிலேயே முழுமையாகப் பரிசீலிக்கப்பட்டு, நில அளவீடு செய்யப்பட்டு, தொழில்நுட்பத் தணிக்கை செய்யப்பட்டு, நிலமகள் தரவுத்தளத்துடன் சரிபார்க்கப்பட்டு, தாலுகா அலுவலகங்களிலேயே நேரடியாக இறுதி செய்யப்படும்.
பட்டா மாறுதல் முடிவடைந்தவுடன், அதுகுறித்த எழுத்துப்பூர்வமான அறிவிப்பை தாசில்தார் அலுவலகம் விண்ணப்பதாரர்களுக்கு வழங்க வேண்டும். நில உட்பிரிவு மனுக்களை, அவை பெறப்பட்ட தேதியிலிருந்து கூடியமட்டிலும் 60 நாட்களுக்குள் பரிசீலித்து முடித்து வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
