ADDED : ஜூன் 09, 2026 12:40 AM

புதுச்சேரி: உழந்தை ஏரியை ஆழப்படுத்தும் பொருட்டு, பொதுப்பணித்துறை சார்பில் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் உள்ள பிரதான நீர் நிலைகளில் உழந்தை ஏரியும் ஒன்று. புதுச்சேரி - அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில் உள்ள உழந்தை ஏரி சுமார் 105.21 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் மழை நீர் தேங்கி நிற்பதால், நிலத்தடி நீராதாரமாக விளங்கி வருகிறது.
நகரின் நீராதாரத்திற்கு உறுதுணையாக உள்ள இந்த ஏரி போதிய பராமரிப்பு இல்லாததால் துார்ந்து நீர் பிடிப்பின் கொள்ளளவு வெகுவாக குறைந்துள்ளது.
அதனையொட்டி, ஏரியை ஆழப்படுத்து, நீர் பிடிப்பின் கொள்ளளவை அதிகரிக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதனையொட்டி, ஏரியில் மேடிட்ட பகுதிகளில் மண் அள்ளிக் கொள்ள தனியாருக்கு வருவாய் துறை மூலம் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒரு லாரிக்கு ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
ஏரியில் மண் அள்ள, கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்து, மண் ஏற்றிச் செல்லும் லாரி பதிவெண்ணுடன் அனுமதி சீட்டு பெற வேண்டும்.
மண் தேவைப்படுவோர், ஆன்லைனில் https://swscollectorate.py.gov.in என்கிற வெப்சைட்டில் முன்பதிவு செய்து அனுமதி பெற்று, குறிப்பிட்ட இடத்தில் மண் எடுத்துக் கொள்ளலாம்.
