தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொகுதி பங்கீட்டில் முதல்வர் ரங்கசாமி.. கண்டிஷன் . பேச்சுவார்த்தையில் தொடரும் சிக்கல்

 தொகுதி பங்கீட்டில் முதல்வர் ரங்கசாமி.. கண்டிஷன் . பேச்சுவார்த்தையில் தொடரும் சிக்கல்

 தொகுதி பங்கீட்டில் முதல்வர் ரங்கசாமி.. கண்டிஷன் . பேச்சுவார்த்தையில் தொடரும் சிக்கல்


ADDED : மார் 14, 2026 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 05:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தொகுதி பங்கீட்டினை இறுதி செய்யும் முன்பாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தருவதை உறுதிப்படுத்த வேண்டும் என, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் முதல்வர் ரங்கசாமி கண்டிஷன் போட்டுள்ளார்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பா.ஜ., அ.தி.மு.க., உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது. வரும் சட்டசபை தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்கிறது. இந்த சூழ்நிலையில் தொகுதி பங்கீடு குறித்து மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று முதல்வர் ரங்கசாமியை அண்ணாமலை ஓட்டலில் சந்தித்து பேசினார்.

பரஸ்பர நலம் விசாரிப்பிற்கு பின், கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கிய மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, வரும் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் தலா 15 தொகுதிகளில் போட்டியிடலாம் என்றார்.

அதற்கு பதில் அளித்த முதல்வர் ரங்கசாமி, கடந்த தேர்தலில் நாங்கள் 16 தொகுதிகளில் போட்டியிட்டோம். நீங்கள் 9 தொகுதிகளில் போட்டியிட்டீர்கள். அ.தி.மு.க., 5 தொகுதிகளில் போட்டியிட்டது. இப்போது, திடீரென 15 தொகுதிகள் கேட்கிறீர்கள். நாங்கள் போட்டியிட்ட 16 தொகுதிகள் முழுதும் எங்களுக்கு வேண்டும். இதில், எந்த தொகுதியையும் விட்டுக்கொடுக்க முடியாது' என்றார்.

எங்கள் கட்சி, மாநில அந்தஸ்தை வலியுறுத்தியே ஆரம்பிக்கப்பட்டது. மத்தியில் இணக்கமான ஆட்சி நடக்கிற நிலையில் நாங்கள் மாநில அந்தஸ்தினை பெற்று தருவோம் என்று மக்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். கடந்த 4.5 ஆண்டுகளாக மாநில அந்தஸ்து கேட்டு வருகிறோம். தொடர்ந்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியும் அனுப்பியுள்ளோம்.

ஆனால் எந்த முடிவையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. கூட்டணிக்கு முன், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தினை தருவதை உறுதி செய்ய வேண்டும்.மாநில அந்தஸ்திற்காக, தேர்தலை புறக்கணிக்கவும் தயாராக உள்ளோம் என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய ரங்கசாமி, கவர்னர், அதிகாரிகளால் ஏற்படும் நிர்வாக சிக்கல்களை புட்டு புட்டு வைத்தார். இதனை கேட்ட மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து விவகாரத்தில் கட்சியின் எண்ணம் வேறு மாதிரியாக உள்ளது. இருப்பினும் கட்சியின் கவனத்திற்கு மீண்டும் கொண்டு செல்கிறேன்' என்றார்.

கூட்டணியில் ல.ஜ.க.,வை சேர்ப்பது குறித்து பேச்சு துவங்கியதும், டென்ஷனான ரங்கசாமி, மாநிலத்தில் சூதாட்டம், கேசினோ என,வணிக நோக்கத்துடன் பண மூட்டையுடன் வரும் யாரையும் புதுச்சேரி மக்களும், அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்டது கிடையாது. இதனை இங்குள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் கொள்கை முடிவாகவே கொண்டுள்ளன. கூட்டணியில் ல.ஜ.க.,வை இணைப்பது என்பது உங்களுடைய முடிவு. ஆனால் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

புதுச்சேரியில் கூட்டணி கட்சிகளின் தலைவர் என்ற முறையில் என்னை கலந்து ஆலோசித்து கூட்டணியை நீங்கள் முடிவு செய்திருக்க வேண்டும். நீங்கள் உறுதி கொடுத்ததாக சொல்கிறீர்கள். உங்கள் கட்சி; உங்கள் முடிவு.உங்களுக்கு வேண்டும் என்றால், யாருடன் வேண்டும் என்றாலும் கூட்டணி வைத்து கொள்ளலாம். நாங்கள் புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து தர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். மாநில அந்தஸ்திற்காக தேர்தலை புறக்கணிக்கவும் தயாராக உள்ளோம் என, மீண்டும் ஒரு முறை அழுத்தமாக பதிவு செய்தார்.

கடந்த தேர்தலில் பா.ஜ., 9 இடங்களில் நின்றது. 5 சீட்டுகள் அ.தி.மு.க.,விற்கு தரப்பட்டது. இந்த முறை அ.தி.மு.க.,விற்கு சீட்டுகள் குறைப்பதாக இருந்தால் மீதமாகும் சீட்டுகளை நீங்களும்; நாங்களும் உட்கார்த்து பேசி பங்கீட்டு கொள்வோம். இது சம்பந்தமாக தனியாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்' என்றார்.

இதன் காரணமாக தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு எந்த முடிவுக்கும் வரவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us