ADDED : மே 05, 2026 05:21 PM
விருத்தாசலம்: ‘மதச்சார்பற்ற வெற்றிக்கூட்டணியில் தொடர்கிறோம்’ என, பிரேமலதா எம்.எல்.ஏ., கூறினார்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்ற தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா, நேற்று விருத்தாசலம் தேர்தல் நடத்தும் அலுவலர் விஷ்ணுபிரியாவிடம், வெற்றிச் சான்றிதழை பெற்றுக் கொண்டார்.
அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
எனது வெற்றியை விஜயகாந்த், விருத்தகிரீஸ்வரர் மற்றும் தொகுதி மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன். தொகுதி மக்களுக்கு பணிவான நன்றி. இந்த தொகுதியை முன்னேற்ற பாடுபடுவேன். மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணிக்கும், ஸ்டாலினுக்கும் நன்றி. ஆட்சியில் இருந்திருந்தால் நான் சொன்னதைவிட அதிகமாக நிறைவேற்றியிருக்க முடியும்.
இருப்பினும், நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். விஜய் எங்க வீட்டுப்பையன், அவருக்கு வாழ்த்துக்கள். நாங்கள் மதச்சார்பற்ற வெற்றிக்கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். புதிதாக அமையும் ஆட்சிக்கு மனதார வாழ்த்துக்கள்.
விஜய் எங்களுக்கு புதிது அல்ல, கேப்டனோடு வாழ்ந்தவர். எங்க பக்கத்து வீடு தான். ஸ்டாலினை சந்தித்து பேசுவேன். முதன்முறையாக எம்.எல்.ஏ.,வாக செல்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தே.மு.தி.க., மாவட்ட செயலாளர்கள் சிவக்கொழுந்து, உமாநாத், நகராட்சி தலைவர் சங்கவி முருகதாஸ், தி.மு.க., நகர துணை செயலாளர் ராமு, காங்., மாவட்ட தலைவர் லாவண்யா, வி.சி., நீதிவள்ளல் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
