போலீஸ் பணிக்கான தேர்வு முடிவகள் விரைவில் வெளியிட கோரிக்கை
போலீஸ் பணிக்கான தேர்வு முடிவகள் விரைவில் வெளியிட கோரிக்கை
ADDED : மே 27, 2026 06:04 PM
நெல்லிக்குப்பம்: தி.மு.க., ஆட்சியில் நடந்த இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வு முடிவுகளை, விரைந்து வெளியிட கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் போலீஸ் நிலையங்களில் காலியாக உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்ப, கடந்த தி.மு.க., ஆட்சியில், சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், 2025 ம் ஆண்டு நவம்பரில் தேர்வு நடத்தப்பட்டது. ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ஆண், பெண்கள் பங்கேற்றனர். இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த ஜனவரியில் உடல்தகுதி தேர்வு நடந்தது. ஆனால் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதால் போலீஸ் தேர்வு முடிவகள் வெளியிடப்படவில்லை. இதனால் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதுபற்றி தேர்வர்கள் கூறுகையில், கடந்த ஆட்சியின் திட்டங்கள் தொடரும் என முதல்வர் விஜய் கூறியுள்ளார். அதன்படி எங்களது தேர்வு முடிவுகளை அறிவித்து பணி நியமனம் செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களுக்கும் வயதாவதால் பலர் மீண்டும் தேர்வு எழுத முடியாது. எனவே முதல்வர் விஜய் காவலர் தேர்வு முடிவுகளை அறிவிக்க நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் என, தெரிவித்தனர்.
அதேபோல் எஸ்.ஐ., பணியிடங்களுக்கான தேர்வு கடந்த தி.மு.க., ஆட்சியில் நடந்தது. இதற்கான முடிவை, கடந்த ஜனவரியில் அறிவித்தனர்.
தொழில் நுட்ப கோளாறால் தேர்வு முடிவில் குளறுபடி ஏற்பட்டதாக கூறி ரிசல்ட்டை திரும்ப பெறுவதாக கூறினர். அதற்கான முடிவும் இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
