பாகூர் உள்விளையாட்டு அரங்கிற்கு பயிற்சியாளர் நியமிக்க கோரிக்கை
பாகூர் உள்விளையாட்டு அரங்கிற்கு பயிற்சியாளர் நியமிக்க கோரிக்கை
ADDED : மே 06, 2026 06:03 PM

பாகூர்: பாகூர் உள்விளையாட்டு அரங்கத்திற்கு பயிற்சியாளர்களை நியமித்து, மாணவர்களுக்கு கோடை கால விளையாட்டு பயிற்சி அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர் கவி (எ) எழில்வேந்தன் விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரியில் விளையாட்டில் அதிகம் ஆர்வம் கொண்டவர்களாக பாகூர் பகுதி மக்கள் இருந்து வருகின்றனர். கபடி, ஹாக்கி, கிரிக்கெட், வாலிபால், சிலம்பம், கராத்தே, டென்னிகாய்ட், இறகு பந்து போட்டிகளில் பல்வேறு சாதனை படைத்து வருகின்றனர்.
விளையாட்டிற்கான இட ஒதுக்கீட்டின் மூலமாக மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்ந்துள்ளர். அதேபோல் இளைஞர்கள் பலர் அரசு வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். பாகூரில் உள் விளையாட்டு அரங்கம் மற்றும் விளையாட்டு திடல் வேண்டும் என, நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து அரசு மூலம் உள் விளையாட்டு அரங்கம் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு பயிற்சியாளர்கள் யாரும் இல்லை. இதனால், உள் விளையாட்டு அரங்கம் பல நேரம் மூடியே கிடக்கிறது.
எனவே , அரசு மற்றும் விளையாட்டு துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி, பாகூரில் உள்ள உள் விளையாட்டு அரங்கத்திற்கு உடனடியாக பயிற்சியாளர்களை நியமித்து, மாணவர்களுக்கு கோடைகால சிறப்பு விளையாட்டு பயிற்சி அளிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
