ADDED : ஜூன் 08, 2026 07:11 PM
புதுச்சேரி: இ.சி.ஆரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவின்படி, புதுச்சேரி நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், விளம்பர பலகைகள் மற்றும் சாலைகளின் அழகியலை பாதிக்கும் பிற செயல்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, போலீஸ்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் இணைந்து சாலையோர ஆக்கிரமிப்புகள், அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் கட்-அவுட்டுகளை அகற்றும் பணி கடந்த 1ம் தேதி துவங்கியது. இப்பணி வரும் 22ம் தேதி வரை நடக்கிறது.
நேற்று 6வது நாளான இ.சி.ஆரில் மடுவுபேட் சந்திப்பு முதல் சிவாஜி சதுக்கம் வரையிலும், உழவர்கரை நகராட்சி மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
இதேபோல், ஆம்பூர் சாலையில், பொதுப்பணித்துறை, புதுச்சேரி நகராட்சி மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் மூலம் சாலையோர ஆக்கிரமிப்புகள்அகற்றப்பட்டன.அதேபோல், கடலுார் சாலை நோணாங்குப்பம் பகுதியில் சாலையோரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையினர் அகற்றினர்.
தொடர்ந்து, இன்று (9ம் தேதி) 7வது நாளாக அம்பலத்தடையார் மடம் சாலை, மிஷன் வீதி முதல் அண்ணா சாலை வரையும், லாஸ்பேட்டை மெயின் ரோடு, காமராஜர் மணிமண்டபம் முதல் காலேஜ் சாலையில் உள்ள உழவர்சந்தை சந்திப்பு வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன.
