பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி கைது
பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி கைது
ADDED : ஜூன் 14, 2026 11:23 PM
புதுச்சேரி: சேதராப்பட்டு பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
பாகூரை சேர்ந்தவர் புருேஷாத்தமன், 50; சேதராப்பட்டில், பெட்ரோல் பங்க் நடத்தி வந்தார். இவர், மனைவியை பிரிந்து தாய் மற்றும் மகனுடன் அய்யங்குட்டிப்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2020ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி இரவு பெட்ரோல் பங்க் வியாபாரத்தை முடித்துக் கொண்டு பைக்கில், வீட்டிற்கு புறப்பட்டார். ஊசுடு ஏரி அருகே வந்தபோது, அவரை மர்ம நபர்கள் வழிமறித்து வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். பின், நிர்வாக காரணங்களுக்காக இவ்வழக்கு அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டது. இருப்பினும், எவ்வித துப்பும் கிடைக்காததால், விசாரணை முடங்கியது.
இதனை அறிந்த டி.ஜி.பி. , ஷாலினி சிங், பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி., மாற்றி கடந்தாண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். அதில், கொலை நடந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி., காட்சி பதிவுகளை ஆய்வு செய்தபோது, புருேஷாத்தமனை கொலை செய்த இருவரின் அடையாளம் தெரிய வந்தது.
அதன் பேரில், குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் கடந்த சில தினங்களாக சென்னையில் முகாமிட்டு தேடி வந்தனர். இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை நேற்று கைது செய்த போலீசார், அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
