ADDED : மே 12, 2026 07:21 PM

புதுச்சேரி: லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலை, மேய்ச்சல் நிலம் போல் மாறி வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பயணித்து வருகின்றனர். நகரின் முக்கியப் பகுதிகளை இணைக்கும் இந்தச் சாலையில், கடந்த சில வாரங்களாக மாடுகளின் நடமாட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது.
இந்தச் சாலையில் மாடுகள் கூட்டம் கூட்டமாக நடுரோட்டில் நிற்பதால், வாகனங்கள் செல்ல வழியின்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் ஹாரன் அடிக்கும்போது, மாடுகள் மிரண்டு அங்குமிங்கும் ஓடுகின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
இவ்வாறு ஓடும் மாடுகளால் அவ்வழியாக கல்லுாரி மாணவர்கள் செல்லவே அச்சப்படுகின்றனர். சாலைகளில் மாடுகளைத் திரியவிடும் உரிமையாளர்கள் மீது நகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பிடிபடும் மாடுகளைப் பட்டியில் அடைத்து அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
