ஆதரவு தரும் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி தவறான முன்னுதாரணம்: பிரேமலதா காட்டம்
ஆதரவு தரும் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி தவறான முன்னுதாரணம்: பிரேமலதா காட்டம்
ADDED : மே 21, 2026 07:31 PM
விருத்தாசலம்: ‘ஆதரவு தரும் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி தவறான முன்னுதாரணம்’ என, பிரேமலதா எம்.எல்.ஏ., கூறினார்.
விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு செய்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
விருத்தாசலம் மருத்துவமனையில் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை அதிகமாக செய்யப்படுகிறது. டாக்டர்கள் வெற்றிகரமாக செய்து வருகின்றனர். டாக்டர்கள் தெரிவித்த அனைத்து கோரிக்கைகளும் சட்டசபையில் பேசி நிறைவேற்றி தருவேன். டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருந்து பற்றாக்குறையும் உள்ளது. எம்.ஆர்.ஐ., இயந்திரம் பெற்றுத் தரப்படும்.
நிலத்தடிநீர் மாசு காரணமாக சிறுநீரக பாதிப்பு அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர். குடிநீரை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
டாக்டர்கள் வாழும் தெய்வங்கள். அவர்களுக்கு கூடுதலாக வசதிகள் செய்து கொடுத்தால், 24 மணி நேரமும் சிறப்பாக செயல்படுவார்கள்.
கூட்டணி ஆட்சியை நாங்களும் வரவேற்கிறோம். தற்போது அதற்கான மாற்றம் வந்துள்ளது. ஆனால், ஆரோக்கியமான ஆக்கப்பூர்வமான மாற்றமாக இருக்க வேண்டும். மெஜாரிட்டி இல்லாமல் எல்லோரையும் அழைத்து அமைச்சர் பதவி கொடுப்பது குதிரை பேரத்திற்கு வழிவகுத்துவிடும்.
மெஜாரிட்டியாக வெற்றி பெற்று, மற்ற கட்சிகளை அழைத்து அமைச்சர் பதவி கொடுத்திருந்தால் வரவேற்றிருப்போம். ஆனால், மெஜாரிட்டி இல்லாது ஆதரவு கொடுப்போருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது தவறான முன்னுதாரணம். முதல்வர் என்னென்ன சொல்லி ஆட்சிக்கு வந்தார்.
தி.மு.க., தீய சக்தி; அ.தி.மு.க., ஊழல் சக்தி என கூறிவிட்டு, அவர்கள் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் நிலைதான் துாய சக்தியா. இதற்கு முதல்வர் என்ன பதில் சொல்வார். மக்கள் தான் எஜமானர்கள். அவர்கள்தான், இவர்களுக்கு ஓட்டுபோட்டு வெற்றி பெற வைத்துள்ளனர். அவரும் கொஞ்சம் அவகாசம் கேட்டுள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ்நாடு ஒரு சிறந்த உதாரணமாக இருக்க வேண்டும். குதிரை பேரத்திற்கோ, லஞ்ச ஊழலுக்கோ அப்பாற்பட்டு, ஒரு நேர்மையான நல்லாட்சி வர வேண்டும்.
இவ்வாறு, பிரேமலதா கூறினார்.
