கூடோ போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு விழா
கூடோ போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு விழா
ADDED : மே 27, 2026 11:13 PM
புதுச்சேரி: மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடந்த அகில இந்திய கூடோ தற்காப்பு கலை போட்டியில் புதுச்சேரி வீரர்கள் பங்கேற்று தங்கம் பதக்கம் பெற்று சாதனை படைத்தனர்.
இந்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அனுமதியுடன், அகில இந்திய கூடோ பெடரேஷன் சார்பில், அகில இந்திய கூடோ தற்காப்பு கலை போட்டி மகாராஷ்டிரா மாநிலம், புனே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விளையாட்டு அரங்கில் நடந்தது.
அனைத்து மாநில கூடோ விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 1,100 பேர் கலந்து கொண்டனர். இதில் புதுச்சேரி மாநில கூடோ தற்காப்பு கலை சங்கத்தின் சார்பில், 23 பேர் கொண்ட அணி, சங்க பொதுச் செயலாளர் சந்தோஷ்குமார் தலைமையில் கலந்து கொண்டனர்.
மூத்த பயிற்சியாளர்கள் மூர்த்தி, செல்வம், பாலச்சந்தர் ஆகியோர் உடன் சென்றனர். கூடோ தேசியப் போட்டியில் தினேஸ்வரா, ரித்திக், ரஷிதா, பாலச்சந்தர், செல்வம் ஆகிய ஐந்து பேர் முதல் பரிசு தங்கம் வென்றனர்.
ஸ்ரீராம்யுவராஜன், ஹரிசங்கர், சிபிஜா, லோகிதா, சிவபாலன் ஆகிய 5 பேர் வெள்ளிப் பதக்கங்கள் பெற்றனர். ரோஷினி, சிவகார்த்தி, யாஷினி ஆகிய 3 பேர் வெண்கல பதக்கங்கள் வென்று சாதனை புரிந்தனர்.
இவர்களுக்கு புதுச்சேரி, காந்தி வீதி எஸ்.எஸ்., கூடோ அகாடமியில் பாராட்டு விழா நடைபெற்றது. புதுச்சேரி மாநில கூடோ சங்க செயலாளர் சந்தோஷ் குமார் தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநில கூடோ சங்க தலைவரும், புதுச்சேரி மாநில ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளர் வளவன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை சால்வை அணிவித்து வாழ்த்தினார்.
