திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டம் கவர்னர், முதல்வர் துவக்கி வைப்பு
திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டம் கவர்னர், முதல்வர் துவக்கி வைப்பு
ADDED : மே 28, 2026 07:32 PM
வில்லியனுார்: திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டத்தை கவர்னர் மற்றும் முதல்வர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.
வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா கடந்த 20ம் தேதி துவங்கியது. வரும் ஜூன் 1ம் தேதி வரை நடைபெறும் விழாவில் தினமும் ஒவ்வொரு மரபினர் சார்பில், காலை சிறப்பு அபிேஷகம், இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.
23ம் தேதி இரவு பாரிவேட்டை நிகழ்ச்சி, 25ம் தேதி காலை 63 நாயன்மார்கள் வீதியுலா, இரவு வெள்ளி யானை, ரிஷபம், மயில் வாகனத்தில் சுவாமி வீதியுலா, 27ம் தேதி இரவு திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது.
முக்கிய விழாவாக நேற்று காலை 8:10 மணிக்கு மேல் தேரோட்டம் நடந்தது. கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.,க்கள் ரவிக்குமார், கார்த்திகேயன் ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.
மாட வீதிகள் வழியாக சென்ற தேர் காலை 11:30 மணியளவில் நிலையை அடைந்தது. பக்தர்களுக்கு அன்னதானம், நீர் மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.
ஐ.ஜி., தலைமையில், சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி.,க்கள் பக்தவசலம், சுப்ரமணியன், இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் நுாற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இன்று (29ம் தேதி) மதியம் தீர்த்தவாரி, இரவு தெப்ப உற்சவம், 30ம் தேதி இரவு முத்துப்பல்லக்கு உற்சவம், 31ம் தேதி விடையாற்றி உற்சவம், ஜூன் 1ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருகாமீஸ்வரன், சிவனடியார்கள், சிவாச்சார்யர்கள் மற்றும் உற்சவ மரபினர் செய்து வருகின்றனர்.
