ADDED : மே 13, 2026 08:21 PM
சிதம்பரம் மே 14–: சம்பளம் வழங்காததை கண்டித்து டாக்டர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலுார் மாவட்டம் , சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் உள்ள பல் மருத்துவ கல்லுாரி, செவிலியர் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், 300 க்கும் மேற்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு தற்போது வரை ஏப்ரல் மாத சம்பளம் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து, நேற்று காலை பணிக்கு வந்த டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், உள்ளிட்டோர் கருப்பு பேட்ச் அணிந்து, தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனில், போராட்டத்தில் குதிக்கவும் முடிவு செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
