ADDED : மே 06, 2026 05:51 PM
புதுச்சேரி: கடலுார் மாவட்டத்தை சேர்ந்த ஆக்டிங் டிரைவர் புதுச்சேரியில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், கீழப்பரம்பை, கிழக்குத் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார், 46; ஆக்டிங் டிரைவர். இவருக்கு, கவிதா என்ற மனைவியும், 2 மகன்கள் உள்ளனர். விஜயகுமார், புதுச்சேரியில் உள்ள பல்வேறு டிராவல்ஸ் நிறுவனத்தில் ஆக்டிங் டிரைவராக பல நாட்கள் அங்கேயே தங்கி வேலை செய்து வருவது வழக்கம்.
இந்நிலையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஓட்டுப்பதிவு செய்ய கீழப்பரம்பைக்கு வந்த விஜயகுமார், தேர்தல் முடிந்த பின் கடந்த 25ம் தேதி மீண்டும் வேலைக்காக புதுச்சேரி வந்தார்.
நேற்று முன்தினம் புதுச்சேரி, திருவள்ளுவர் சாலையில் உள்ள சலுான் கடை எதிரே அடையாளம் தெரியாத நபர் அதிக மது போதையில் இறந்து கிடப்பதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விசாரித்தபோது இறந்தவர் டிரைவர் விஜயகுமார் என தெரிய வந்தது. இதுகுறித்து அவரது சகோதரர் ஜெயக்குமார் புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீசார் சந்தேக மரணம் பிரிவில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
