தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கு வேட்பாளரை தத்து எடுக்க போட்டி
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலுக்கு வேட்பாளரை தத்து எடுக்க போட்டி
ADDED : ஜூன் 20, 2026 10:01 PM

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மங்கலம், தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் ரங்கசாமி, தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வர உள்ளது.
இந்நிலையில் சட்டசபை தேர்தலில், தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி 10,024 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். த.வெ.க., கூட்டணியுடன் போட்டியிட்ட நேயம் மக்கள் கழக வேட்பாளர் விநாயகம் 5,583 ஓட்டுகள் பெற்று 2ம் இடம் பிடித்தார். சுயேச்சையாக நின்ற சேது செல்வம் 3,984 ஓட்டுகள் பெற்று 3ம் இடம், இண்டியா கூட்டணியில் நின்ற காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., 2,990 ஓட்டுகள் பெற்று 4ம் இடம் பிடித்து, டிபாசிட்டை இழந்தார்.
தற்போது இண்டியா கூட்டணி உடைந்து போய், தமிழகத்தில் த.வெ.க., வுடன் கூட்டணி அமைச்சரவையில் உள்ளது. இந்நிலையில், வரும் இடைத்தேர்தலில், நே.ம.க., தங்கள் கட்சி வேட்பாளர் விநாயகத்தை கூட்டணியில் நிறுத்த த.வெ.க., பொதுச் செயலாளர் ஆனந்துடன், நேரு எம்.எல்.ஏ., பேச்சு நடத்தினார். அப்பொழுது, கடந்த முறை கூட்டணிக்கு இந்த தொகுதியை விட்டு கொடுத்தோம். இந்த முறை த.வெ.க., போட்டியிட தலைமை விரும்புகிறது. அதனால் தங்கள் கட்சி வேட்பாளர் விநாயகத்தை எங்கள் சார்பில் நிறுத்துங்கள் என கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, காங்., தரப்பில் நடந்த பேச்சில் உள்ள காங்., கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ., மட்டும் உள்ளார். அதனால் வரும் இடைத்தேர்தலில் த.வெ.க., கூட்டணியில் காங்., வேட்பாளராக விநாயகம் நிற்கட்டும். மேலும் நீங்களும் எங்களுடன் இணைந்து விடுங்கள் என்று காங்., தரப்பில் நேருவிடம் கூறப்பட்டுள்ளது. இதனால் மூன்று கட்சியும் வேட்பாளரை தத்து எடுக்க போட்டி போட்டு வருகின்றன.
