50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்கால ஆயுதம் கண்டெடுப்பு
50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்கால ஆயுதம் கண்டெடுப்பு
ADDED : மே 14, 2026 06:53 PM
பண்ருட்டி: தென்பெண்ணையாற்றில் பழைய கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை, தென்பெண்ணை ஆற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வலர் பிரதாப் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பழைய கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவி ஒன்றை கண்டெடுத்தனர்.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறியதாவது :-
கண்டரக்கோட்டை, தென்பெண்ணை ஆற்றில் கண்டெடுத்த பழைய கற்கால கருவி 7.8 செ.மீ நீளமும் , 5.7 செ.மீ அகலமும் கொண்டது.
பழைய கற்கால ஆயுதத்தை, முதன் முதலில் ராபர்ட் புரூஸ்புட் என்ற இங்கிலாந்தின் நிலவியல் ஆய்வாளர் கடந்த, 1863ல் சென்னை அருகே உள்ள பல்லாவரத்தில், பழைய கற்கால கருவிகளை கண்டெடுத்தார். தமிழகத்தில் தொல்லியல் துறையினர் நடத்திய அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழைய கற்கால ஆயுதங்கள் 3 வகைகள் ஆகும்.
இதில், கீழை பழங்கற்காலம் 17 லட்சம் முதல் 3.85 லட்சம் ஆண்டுகள் வரை பழமையானது. இடை பழங்கற்காலம் 3.85 லட்சம் முதல் 80 ஆயிரம் ஆண்டுகள் வரை பழமையானது. மேலைப் பழங்கற்காலம் 80 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ஆண்டுகள் வரை பழமையானது.
17 லட்சம் முதல் 3.85 லட்சம் ஆண்டுகள் வரை பழமையான கற்கருவிகள் தமிழகத்தில் தொல்லியல் துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளுவர் மாவட்டம் அருகே உள்ள குடியம் குகைப்பகுதியில், 30 இடங்களில் பழைய கற்கால கல் ஆயுதங்களை தொல்லியல் அறிஞர்கள் கண்டறிந்தனர்.
சென்னைக்கு அருகில் இருக்கும் கொற்றலை ஆற்றின் சமவெளியிலும், செங்கல்பட்டு அருகே உள்ள பாலாறு , மதுரை , காஞ்சிபுரம், வேலுார், திருவள்ளூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் இத்தகைய கருவிகள் கண்டறியப்பட்டன.
இக்கருவிகள் மிகவும் கரடுமுரடாக செதுக்கப்பட்டுள்ளன. கல்லால் ஆன கருவிகளோடு மரத்தாலான ஈட்டிகளையும், தண்டுகளையும் அக்கால மக்கள் கையாண்டதும் தெரியவந்துள்ளது.
தற்போது கண்டரக்கோட்டை, தென்பெண்ணை ஆற்றில் கண்டெடுத்த கல் ஆயுதம் மேலை பழங்கற்காலத்தை சேர்ந்த சுரண்டும் வகையை சேர்ந்த ஆயுதமாகும். இதன் காலம் தோராயமாக 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக இருக்கலாம்.
இதே போல சுரண்டும் வகை கல் ஆயுதம், விருத்தாசாலம் அருகே உள்ள பாலக்கொல்லை மற்றும் பண்ருட்டி அருகே உள்ள ஒடக்கன்குப்பம் பகுதிகளில் ஏற்கனவே ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
பழைய கற்காலத்தில் மக்கள் நாடோடியாக வாழ்ந்தனர். பண்ருட்டி பகுதியில் பழங்கால மக்கள் இடம் பெயர்ந்து இருக்கலாம் அல்லது வெள்ளப் பெருக்கின் காரணமாக கூட இப்பகுதியில் கல் ஆயுதம் வந்திருக்கலாம் .
ஏற்கனவே கடந்த 2 மாதங்களுக்கு முன் உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றில் பழங்கால மக்கள் பயன்படுத்திய சிறிய அளவிலான கிழிப்பான் ( பிளேடு) கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதிகளில் மேற்பரப்பு கள ஆய்வுகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
