பிரமாண்ட வெற்றியை எதிர்பார்த்த தி.மு.க.,வை கைவிட்ட பெண்கள்!
பிரமாண்ட வெற்றியை எதிர்பார்த்த தி.மு.க.,வை கைவிட்ட பெண்கள்!
ADDED : மே 05, 2026 05:58 AM

- நமது நிருபர் -
சட்டசபை தேர்தலில் பெண்கள் ஓட்டுகள் அதிகமாக பதிவான நிலையில், பிரமாண்ட வெற்றியை எதிர்பார்த்த தி.மு.க.,வுக்கு, மிகப்பெரிய ஏமாற்றத்தை தேர்தல் முடிவுகள் தந்துள்ளன.
கடந்த 2021ல் ஆட்சிக்கு வந்ததும், அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தி ற்கு, முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். பின், கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழு கடன் 2,755.99 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும், 2024 பிப்., 21ல் பெண்களுக்கு உரிய அங்கீகாரம் அளித்திடும் வகையில், 'தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை' வெளியிடப்பட்டது.
பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை, ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, அரசு பள்ளிகளில் படித்த மாணவ - மாணவியர் உயர் கல்வி படித்தால், மாதந்தோ றும் 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டம், பணிபுரியும் மகளிர் தங்க, 'தோழி' விடுதிகள் துவக்கப்பட்டன.
மகளிருக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதை மிகப்பெரிய சாதனையாக, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கூறி வந்தனர்.
சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், மகளிரை கவர, கோடை கால நிவாரணத்தொகை 2,000 ரூபாய், மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்காக மகளிர் உதவித்தொகை 3,000 ரூபாய் சேர்த்து, ஒரே தவணையாக பெண்கள் கணக்கில் 5,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டது.
இது, தேர்தலில் வெற்றியை தேடி தரும் என தி.மு.க.,வும், கூட்டணி கட்சிகளும் நம்பின. இந்நிலையில், இதுவரை இல்லாத அளவிற்கு, பெண்கள் அதிக அளவில் இந்த தேர்தலில் ஓட்டளித்தனர்.
மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 12 தவிர, மற்ற தொகுதிகள் அனைத்திலும், ஆண்களை விட பெண்கள் அதிகம் ஓட்டளித்திருந்தனர்.
பெண்கள் ஓட்டுப்பதிவு அதிகம் என்பதால், பிரமாண்ட வெற்றி கிடைக்கும் என தி.மு.க., நம்பியது; ஆனால், அனைத்தும் பொய்த்து விட்டன; த.வெ.க., அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
'பெண்கள் மீண்டும் தங்களுக்கு மகுடம் சூட்டுவர்' என தி.மு.க., தலைமை எதிர்பார்த்தது. ஆனால், பெண்கள் ஓட்டு தி.மு.க.,வுக்கு கிடைக்காமல் ஏமாற்றமே மிஞ்சியது.
