ADDED : மார் 27, 2026 05:37 AM

லஞ்சத்தின் முதல் படி இலவச பொருள் கொடுப்பதுதான் லஞ்சத்திற்கு முதல் படி. ஆண்களுக்கு மதுவை போல, பெண்களுக்கு இலவச பொருட்கள். நான் இதுவரை எந்த இலவச பொருளையும் வாங்கியது இல்லை. ஆனால் இலவசம் கொடுத்தால்தான் ஓட்டு போடுவோம் என்று மக்கள் இருந்தால் என்ன செய்வது? பணம் அல்லது பொருள் கொடுத்து ஓட்டு வாங்குவது தான் தமிழகத்தின் நிலை. -ச.சேட்டு, கவுண்டம்பாளையம்
பிடுங்கி விடுவார்கள்
பிரிட்ஜ் கொடுத்தால் என்ன, பிளேன் கொடுத்தால் என்ன? நமது வரிப்பணத்தை தான் நமக்கு கட்சியினர் வேறு ரூபத்தில் திருப்பி தருகின்றனர். எனவே, அவர்கள் கொடுப்பதை வாங்கி கொள்வோம். ஆனால், விரும்பும் கட்சிக்கே ஓட்டு போடுவோம். எப்படியும் ஆட்சிக்கு வந்தவுடன் பணமாக நம்மிடம் இருந்து பிடுங்கி கொள்வார்கள்.
-ஜெகதீசன், வசந்தா மில்ஸ்
ஓட்டு விற்க மாட்டேன்
பிரிட்ஜ் மட்டுமல்ல, எந்த கட்சி என்ன கொடுத்தாலும் வாங்கி கொள்வேன். ஏனென்றால் அவர்கள் சொந்த பணத்தை செலவு செய்யவில்லை. நாம் செலுத்தும் வரியில், அல்லது லஞ்சமாக வாங்கி குவித்த பணத்தின் ஒரு பகுதி தான். இதற்காக என் வாக்கை விற்க மாட்டேன். விரும்பும் கட்சிக்குதான் போடுவேன்.
- கே.சிந்து, சூலுார்
1,000 ரூபாயே வரலை
கட்சிகள் சுயநலத்துக்காகவே இதெல்லாம் தருகின்றன. அறிவிப்புக்கும் அமலாக்கத்துக்கும் வித்தியாசம் உண்டு. மகளிர் உரிமை தொகை அறிவித்தனர். அமலாக்கத்தில் பார்த்தால், உண்மையிலேயே நலிந்த பல பெண்களுக்கு அந்த ஆயிரம் ரூபாய் இன்னும் கிடைக்கவில்லை. எல்லாம் ஏமாற்று வேலை.
-விஜயகுமார், பாப்பம்பட்டி பிரிவு
தந்தா வாங்கிப்போம்
முதலில் பேன், மிக்சி, டி.வி. கொடுத்தாங்க. இப்ப பிரிட்ஜ் வரை வந்தாச்சு. வரட்டும், வாங்கி கொள்வோம். ஆனால் இதற்கு எல்லாம் ஓட்டு போட முடியாது. உருப்படியான திட்டங்கள் இருந்தால் தான் ஓட்டு. கொடுப்பதை வாங்கி கொள்வோம்; பிடித்தவருக்கு ஓட்டளிப்போம் என்று பெண்கள் முன்பே தீர்மானித்து விட்டோம்.
- திபீகா, பீளமேடு
இரட்டை இலை தான்
வயதானவர்கள் இதுபோன்ற அறிவிப்பால் சந்தோசம் அடைவார்கள். என்னை மாதிரி இளைஞர்கள் இந்த அறிவிப்புகளை பார்த்து ஒட்டு போடுவதில்லை. இரட்டை இலைக்கு மட்டுமே ஓட்டு போடுபவர்கள் உள்ளனர்; பிரிட்ஜ் கொடுக்காட்டியும் ஓட்டு போடுவார்கள். என் ஓட்டு பிரிட்ஜ், உதவித்தொகை போன்ற அறிவிப்புகளுக்காக இல்லை.
-கருணாமூர்த்தி, போத்தனுார்
விவசாயி பழனிசாமி
பிரிட்ஜ் கொடுக்காவிட்டாலும் அ.தி.மு.க.வுக்குத்தான் எனது ஓட்டு. நான் விவசாயி மகள். விவசாயத்துக்கு முக்கியத்துவம் தரும் பழனிசாமியை ஆதரிப்பதுதான் முறை. மற்றபடி பரிசுப் பொருட்கள் கொடுப்பது, கொடுக்காமல் போவது எல்லாம் இரண்டாம் பட்சம்தான்.
-ரம்யா விக்னேஷ், சிவானந்தா காலனி
கல்வி இலவசமா தரலாமே!
நாம் கஷ்டப்படுவதே குழந்தைகளை படிக்க வைப்பதற்கே. தரமான கல்வி இலவசமாக அளிக்கப்படும் என எந்த கட்சியுமே சொல்வதில்லை. நல்ல பள்ளியில் சேர்க்க பல ஆயிரங்கள் தேவை; கல்லுாரியில் சேர்க்க லட்சக்கணக்கில் தேவை. கல்வி தருவதாக சீமான் மட்டும் சொல்கிறார். ஆனால் அவர் ஆட்சிக்கு வர முடியுமா, தெரியவில்லை.
- அப்பாஸ், உக்கடம்
ஜனநாயகம் கதி என்ன?
ஆரோக்கியமான அரசியல் வேண்டும் என்று மக்கள் ஆசைப்படும் சூழலில், இப்படி இலவசங்களை மக்கள் தலையில் போட்டு கொல்வது அநியாயம். இப்போதே ஒரு தொகுதியில் போட்டியிட 30 - 40 கோடி செலவு ஆகிறதாம். கோடீஸ்வரனும் கொள்ளையனும் மட்டும் தான் தேர்தலில் நிற்க முடியும் என்றால் ஜனநாயகம் என்னாகும்?
- கொங்கு பெரியசாமி, தீத்திபாளையம்
இலவசம் கெட்ட வார்த்தை
இலவசம் என்கிற கான்சப்ட்டே இருக்கக் கூடாது. பணம் இருக்குதோ இல்லையோ தேவையான பொருட்களை வாங்கும் நிலைக்கு மக்கள் வந்தாச்சு. அதனால் மக்கள் பணத்தை நாட்டின் முக்கிய பிரச்னைகளை தீர்ப்பதற்கு செலவிடலாம். கட்சிகள் ஏமாற்றலாம்; நாம் ஏமாற கூடாது. இதை தவிர்க்க வேண்டும்.
- அபர்ணா, ராம்நகர்
ஜில்லுன்னு ஒரு பொய்
கேட்கும் போதே ஜில்லுன்னு இருக்கு. எத சொன்னாலும் அத நம்பி ஜனங்க ஓட்டு போடுவாங்கன்னு நினைச்சு, இப்படி எல்லா கட்சிகளும் அறிவிக்கிறாங்க. டாஸ்மாக் மூடுவோம்னாங்க. செஞ்சாங்களா? தேர்தலப்போ சொன்னத ஆட்சிக்கு வந்த பிறகு செய்யலன்னா, கோர்ட்ல ஜனங்க கேஸ் போடணும். அப்பதான் இவங்கலாம் திருந்துவாங்க.
-எம்.இயலரசன், சரவணம்பட்டி
ஏமாற்றும் செயல்
இலவசங்களை அறிவிப்பதே மக்களை ஏமாற்றும் செயல்தான். பிரிட்ஜ் என்பது எல்லோர் வீட்டிலும் இருக்கக்கூடிய பொருள். அதை கொடுத்துதான் ஓட்டு வாங்க வேண்டும் என்பது பரிதாப நிலை. எந்த கட்சியாக இருந்தாலும் திட்டங்களை கூறி ஓட்டு கேட்டால் நாட்டுக்கு நல்லது.
-சே. குணசேகரன், பாப்பநாயக்கன்பாளையம்

