லோக்சபாவில் இனி தனி வரிசை; தி.மு.க.,வின் கோரிக்கை ஏற்பு
லோக்சபாவில் இனி தனி வரிசை; தி.மு.க.,வின் கோரிக்கை ஏற்பு
ADDED : ஜூன் 05, 2026 05:13 AM

- நமது டில்லி நிருபர் -
பார்லிமென்டில் காங்கிரசிடம் இருந்து விலகி தனியாக அமர தி.மு.க., -எம்.பி.,க்களுக்கு லோக்சபா செயலகம் அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்டது. இந்த தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றாலும், ஆட்சி அமைப்பதற்கான போதிய பெரும்பான்மையை பெறவில்லை. இதையடுத்து, ஐந்து இடங்களை பிடித்த காங்கிரஸ், தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு அளித்தது.
இதையடுத்து, தி.மு.க.,வுடனான காங்கிரசின் கூட்டணி முடிவுக்கு வந்தது. 'இண்டி' கூட்டணியில் ஒன்றாக இருந்த இரு கட்சிகளின் எம்.பி.,க் களுக்கு பார்லிமென்டின் லோக்சபாவில் அருகருகே இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. கூட்டணி முறிந்ததை அடுத்து, தங்கள் எம்.பி.,க்களை காங்கிரசுக்கு அருகில் இல்லாமல் தனியாக அமர வைக்க கோரி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தி.மு.க., தரப்பில் கடந்த மாதம் கடிதம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தி.மு.க.,வின் கோரிக்கையை லோக்சபா செயலகம் ஏற்றுள்ளது. அக்கட்சி எம்.பி.,க்கள் காங்கிரசிடம் இருந்து விலகி தனியாக அமர நேற்று அனுமதி அளிக்கப்பட்டது. இந்த புதிய இருக்கை மாற்றத்தை, அடுத்த மாதம் தொடங்கவுள்ள மழைக்கால கூட்டத்தொடரின் போது காண முடியும் என, டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
