எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா விவகாரம்; மதிமுக முடிவுக்கு விஜய் தடை
எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா விவகாரம்; மதிமுக முடிவுக்கு விஜய் தடை
ADDED : ஜூன் 09, 2026 05:22 AM

- நமது நிருபர் -
ம.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா விவகாரத்தில், துரை வைகோவின் யோசனையை ஏற்க, முதல்வர் விஜய் மறுத்து விட்டதாக தெரிகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் நான்கு தொகுதிகளில், உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க., போட்டியிட்டது. அதில், இரு தொகுதிகளில் வெற்றி பெற்றது.
தேர்தலில் த.வெ.க.,வுக்கு பெரும்பான்மை கிடைக்காததால், தி.மு.க., கூட்டணியில் தனிச்சின்னத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ், வி.சி.க., - முஸ்லிம் லீக் மற்றும் கம்யூ., கட்சிகள் அணி மாறின.
இதில், காங்., - வி.சி.க., மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள், அமைச்சரவையிலும் சேர்ந்துள்ளன. இதனால், 'தி.மு.க., சின்னத்தில், ம.தி.மு.க.,வினர் போட்டியிட்டது துரதிருஷ்டமானது' என, ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ, தன் மனக் குமுறலை வெளிப் படுத்தி இருந்தார்.
இந்நிலையில், திருச்சி சென்றிருந்த முதல்வர் விஜயை அவர் சந்தித்தார். அத்துடன், கடந்த 4ம் தேதி முதல்வர் விஜயை அவரது வீட்டிலும் சந்தித்து பேசினார்.
இதுகுறித்து, த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது: த.வெ.க., அமைச்சரவையில் இடம் பெற முடியாமல் போனதால், துரை வைகோ மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார். அதனால், முதல்வரை சந்தித்த துரை வைகோ, 'நீங்கள் சொன்னால், இப்போதே எங்கள் இரு எம்.எல்.ஏ.,க்களையும் ராஜினாமா செய்ய வைத்து, தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறி, உங்களுடன் கூட்டணிக்குள் வந்து விடுகிறோம்; நாம் இணைந்து இடைத்தேர்தலை சந்திக்கலாம்' என்று கூறியிருக்கிறார்.
ஆனால், முதல்வர் விஜய்க்கு இதில் விருப்பமில்லை. ஏனென்றால், த.வெ.க., கூட்டணியில் இருந்து கம்யூ., கட்சிகள் வேண்டுமானால் வெளியேற வாய்ப்புள்ளது. அவர்களின் நான்கு எம்.எல்.ஏ.,க்களை ஈடுகட்ட, அ.தி.மு.க.,வில் இருந்து நான்கு பேர் வந்து விட்டனர்.
ஏற்கனவே, குதிரை பேரம் என, த.வெ.க., அரசு மீது விமர்சனம் இருக்கிறது. இந்நிலையில், தி.மு.க., சின்னத்தில் வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்தால், த.வெ. க.,வுக்கு கெட்ட பெயர் தான் கிடைக்கும். அதன் தாக்கம், இடைத்தேர்தலில் த.வெ.க.,வின் வெற்றியை பாதிக்கும் என்று முதல்வர் விஜய் நினைக்கிறார்.
இருப்பினும், ம.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை ராஜினாமா செய்ய வைத்து, கூடுதல் தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்தித்தால், த.வெ.க.,வுக்கு நல்லது என, அதன் அரசியல் வியூக வகுப்பாளர்கள் கருதுகின்றனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
